கசாபுக்கு எப்படி அஞ்சலி செலுத்தச் சொல்லலாம்?: பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் ஞானசேகரன். அவர் கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்களை அழைத்து திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி அறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டவரின் பெயர் தெரியுமா என்று மாணவர்களை அவர் கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் அஜ்மல் கசாப் என்று பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர் கசாபுக்கும் அஞ்சலி செலுத்துமாறு தங்களை வலியுறுத்தியதாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து தலைமை ஆசிரியரின் செயல்பாடு குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இது தவிர சென்னையில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் விளக்கம் கேட்டதாகவும் அதற்கு பதில் அளிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசியர்களுக்கும் ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் என்னை பிடிக்காத சிலர் என் மீது வீணான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஞானசேகரனின் அறிக்கை பொய்யானது என்றும் அவர் கசாபுக்கு அஞ்சலி செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தியது உண்மை என்றும் கூறி அப்பள்ளி ஆசிரியர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.