குற்றப்பத்திரிக்கையுடன் லேட்டாக கோர்ட்டுக்கு வந்த போலீஸ்- கிளம்பிப் போன மாஜிஸ்திரேட்!
டெல்லி: பாலியல் பலாத்காரத்தைத்த் தடுக்க முடியாமல் கோட்டை விட்ட டெல்லி போலீஸார், அந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வதிலும் பொறுப்பின்றி் நடந்து கொண்டது அனைவரையும் கடும் கோபமடைய வைத்துள்ளது.
குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய போலீஸார் மிகவும் தாமதமாக வந்ததால் மாஜிஸ்திரேட் தனது பணி நேரம் முடிந்து வீட்டுக்குப் போய் விட்டார். இதனால் நேற்று குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் நாளை மீண்டும் போலீஸார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள சாகேட் என்ற இடத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனால் கோர்ட்டில் செய்தியாளர்கள் குவிந்து காத்திருந்தனர். ஆனால் கோர்ட் நேரம் முடியும் வரை போலீஸாரைக் காணவில்லை.
இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டும் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். அதன் பிறகுதான் போலீஸ் தரப்பு வந்து சேர்ந்தது. பென் டிரைவில் ஆவணங்களையும், குற்றப்பத்திரிக்கையையும் அப்லோட் செய்வதில் ஏற்பட்ட தாமதமே தாங்கள் தாமதமாக வரக் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்தத் தாமதம் காரணமாக நேற்று குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் நாளை மீண்டும் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
முன்னதாக ஆயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் 35 பக்கங்களுக்கு மட்டுமே குற்றப்பத்திரிக்கை இருப்பதாகவும், இருப்பினும் பிற ஆவணங்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேர் மீது குற்றச்சாட்டு
பிசியோதெரப்பி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பேருந்தின் டிரைவர் ராம்சிங் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு வயது 19 முதல் 35 வரையில் உள்ளது. இவர்கள் மீது பாலியல் பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, திருட்டு, ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் ஐவர் மீதும் கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவியின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் ராஜீவ் மோகன் கோரியுள்ளார்.
ஐந்து பேருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு அவர்களின் வயது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அவர்கள் கோர்ட்டுக்குக் கூட்டி வரப்படவில்லை. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் மரண தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் கதி என்ன?
கைது செய்யப்பட்ட 6 பேரில் 6வது நபர் தனக்கு 17 வயது என்று கூறியுள்ளான். இதனால் அவனை இந்த வழக்கில் சேர்க்கவில்லை. அவனை தனியாக சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்த திட்டமிடப்பபட்டுள்ளது. அதேசமயம், டிஎன்ஏ சோதனை மூலம் அவனது வயதையும் உறுதிப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவனையும் முடிந்தவரை மற்ற ஐவருடன் சேர்த்து விசாரித்து கடும் தண்டனை வாங்கித் தரவும் போலீஸ் தரப்பில் முயன்று வருகிறார்கள்.
இந்த ஆறு பேரில் இந்த சிறுவன்தான் மிகவும் மோசமான முறையில் அப்பெண்ணிடம் நடந்து கொண்டு அவரது மரணத்திற்கும் முக்கியக் காரணமாக இருந்துள்ளான் என்பது போலீஸாரின் வாதமாகும்.
ஒருவேளை இவன் சிறார் என்பது நிரூபணமாகி சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால் அவனுக்கு அதிகபட்சம் வெறும் 3 ஆண்டுகளே தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் கூட தண்டனையாக இருக்காது, சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் அவன் அடைக்கப்படுவான்.
இந்த வழக்கை மிகவும் துல்லியமாக கையாண்டு, யாரும் தப்பி விடாத வகையில் மிகவும் கவனமுடன் செயல்பட டெல்லி போலீஸார் உறுதி பூண்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications