21ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்கிறது.. 2ம் வகுப்பு கி.மீக்கு 6 பைசா, ஏசி கி.மீக்கு 10 பைசா உயர்வு

அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாவதற்கு முன்பே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில்,
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் கி.மீ.க்கு 6 பைசாவும், முதல் வகுப்புக் கட்டணம் கி.மீக்கு 3 பைசாவும், ஏசி சேர் கார் மற்றும் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏசி 3 டயர் கட்டணம் கி.மீ.க்கு 10 பைசாவும், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. 2 டயர் கட்டணம் கி.மீக்கு 6 பைசாவும் உயர்த்தப்படுகிறது. இது தவிர புறநகர் ரயில் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது.
உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டணம் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
ரயில்வே துறையை அனைத்து வகையிலும் நவீனப்படுத்துவது அவசியமானது. மேலும் பல ரயில் திட்டப் பணிகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பயணிகள் பாதுகாப்புக்காக நவீன கருவிகள் வாங்க வேண்டியுள்ளது. 6வது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியதால் ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துவிட்டது. ஊதியச் செலவு மட்டும் ரூ. 73,000 கோடி அதிகரித்துவிட்டது.
கட்டணத்தை உயர்த்தாதல் கடந்த 2010-11ம் ஆண்டில் ரயில்வேக்கு ரூ. 20,000 நஷ்டம் ஏற்பட்டது. 2010-11ம் ஆண்டு இது ரூ. 25,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனால் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ரூ.6,600 கோடி மட்டுமே கூடுதல் வருமானம் கிடைக்கும், அந்த அளவுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் புதிய கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்றார்.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 2ம் வகுப்பு ரயில் கட்டணத்தை மிக மிகக் குறைந்த அளவுக்கு உயர்த்தினார் அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி. இதையடுத்து தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவரை பதவி விலக வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசில் இருந்து விலகுவதற்கு அவர் அடித்தளம் போட்டதும் அப்போது தான்.
மம்தாவின் எதிர்ப்பால் 2ம் வகுப்புக்கான கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது. ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. இரண்டாம் வகுப்பு கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பன்சால் பேசுகையில், கட்டண உயர்வுக்கு மக்களும் தயாராகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கட்டண உயர்வு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் அதற்கான யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் கட்டணத்தை உயர்த்த இதுவே சரியான நேரம் என்று கூறுகிறார்கள். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க கட்டண உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்றார்.
மேலும் பன்சால் கூறியதில் மிக முக்கியமான ஒரு விஷயமும் இருந்தது. அது, ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க சுய அதிகாரம் கொண்ட ஒரு குழுவை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்பதாகும்.
இந்த அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டால், பெட்ரோல் விலை, மின் கட்டணம் மாதிரி ரயில் கட்டணமும் அந்தத் துறையின் செலவுகளுக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தப்படும்.












Click it and Unblock the Notifications