இதுதான் பாகிஸ்தான்.. அதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாம்?
காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், அத்துமீறி உள்ளே புகுந்து இரண்டு இந்திய ஜவான்களை கொன்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம். அதில் ஒரு வீரரின் தலையைக் கொய்து எடுத்துச் சென்று அட்டூழியமும் செய்துள்ளனர். இது சாதாரண அத்துமீறல் மற்றும் கொலையாகத் தெரியவில்லை. மாறாக, நமக்குப் பல செய்திகளையும் விட்டுச் சென்றுள்ளதாகவே தெரிகிறது. அதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் - இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதிக்கு வாய்ப்பே இல்லை என்பதே.
இந்தியா என்னதான் அமைதிக்காக பாடுபட்டாலும், படுத்துப் புரண்டாலும், பேசித் திரிந்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள் இப்படியே மோதல் போக்கில்தான் இருந்து வருவோம் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே அந்த செய்தி நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.
நி்ம்மதியைக் குலைப்பதே அதன் கொள்கை
தீவிரவாதம், கள்ளநோட்டுக்கள் என கையில் கிடைக்கும் எந்த ஆயுதத்தையும் விடாமல் தொடர்ந்து பயன்படுத்தி இந்தியாவை நிம்மதி இல்லாமல் ஆக்குவோம் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே இந்த செய்தி நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
பிரச்சினை நம்மிடம்தான்
உண்மையில் பிரச்சினை நம்மிடையேதான் உள்ளது. ஒருவர் நம்மைப் பார்த்து உன்னை நான் வெறுக்கிறேன் என்று சத்தம் போட்டுக் கத்தும்போது அவரைப் பார்த்து பரவாயில்லை, நாம் சமாதானமாகப் போவோம் என்றா கூறுவார்கள்... அதைத்தான் நாம் தொடர்ந்து பாகிஸ்தானிடம் செய்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கையை உருவாக்கும் பேச்சுக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆனால் பாகிஸ்தானோ அதற்கு நேர் மாறாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாகி்ஸ்தான் விஷயத்தில் நாம் மறக்கக் கூடாத 6 விஷயங்கள் உள்ளன.
எதிர்த்தால்தான் பாகிஸ்தான்
இந்தியாவை எதிர்த்து செயல்படுவதாலேயே இன்னும் பாகிஸ்தான் நிலைத்து இருக்கிறது. பாகிஸ்தானின் கொள்கையே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுதான். இந்தியாவில் இருப்பதைப் போல அமைதி, சகிப்புத்தன்மை, வளர்ச்சி, மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகள் எதுவுமே பாகிஸ்தானில் கிடையாது. இந்தியாவுக்கு எதிரான நாடு என்ற ஒரே காரணத்தில்தான் பாகிஸ்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனது நாடே அழிந்தாலும் கூட பரவாயில்லை, இந்தியாவை எதிர்ப்பதை விட்டு விடக் கூடாது என்பதே பாகிஸ்தான் நோக்கமாக உள்ளது.
எப்போதும் போர் நினைவுதான்
பாகிஸ்தான் எப்போதும் போருக்குத் தயாராகவே இருந்து வருகிறது. எப்போது பார்த்தாலும் போர் மேகத்தின் கீழேயே அது இருந்து வருகிறது. அமைதி தொடர்பான பேச்சுக்கள் நடந்தாலும் கூட அதன் ராணுவம், எப்போது இந்தியாவைத் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே இருந்து வருகிறது. இப்படிபப்ட்ட சூழ்நிலையில் எப்படி இந்தியா பாகிஸ்தானிடமிருந்து அமைதியை எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.
மக்களுடன் பேச வேண்டாமா?
நாம் முதலில் பாகிஸ்தான் அரசையும், மக்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும். அதை இதுவரை நாம் செய்ததே இல்லை. நாம் இதுவரை பாகிஸ்தான் அரசுடன்தான் பேசி வந்துள்ளோம். பாகிஸ்தான் மக்களுடன் இதுவரை எந்தவிதமான உரையாடலும் நடந்ததில்லை. பாகிஸ்தான் மக்கள் மத்தியில் இந்தியா குறித்த துவேஷ உணர்வை நீக்கும் முயற்சிகளை நாம் மேற்கொண்டதில்லை.
அன்னியப்படுத்த வேண்டும்
கொள்கையே இல்லாத பாகிஸ்தானை நாம் வெல்ல வேண்டுமானால், அந்த நாட்டு மக்களிடமே அதை அன்னியப்படுத்த வேண்டியது அவசியமாகும். பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு வேளை உலக அளவிலான நிர்ப்பந்தம் காரணமாக பாகிஸ்தானுடன் நாம் அமைதிப் பேச்சுக்களை நடத்த வேண்டியநிலை வந்தாலும் கூட நமது நிலையில் உறுதியாக இருந்து இதை சாதிக்க வேண்டும். பாகிஸ்தான் நம் மீது ஏவி விடும் தீவிரவாதம் அதையே திருப்பித் தாக்குவதை வேடிக்கை பார்க்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
மறப்போம்- மன்னிப்போம்... இனி கூடாது
நாம் எதையும் சுலபமாக மறந்து விடுவோம், மன்னித்தும் விடுவோம் என்பதை பாகிஸ்தான் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. நம் மீது ஆயிரம் ஆண்டுளானாலும் கூட சண்டைக்கு இழுப்பதை அது விடாது. நமது மறப்போம் - மன்னிப்போம் நிலைப்பாட்டால்தான் 1948, 65, 71, 98, 2001 என 5 முறை போரிட்டும் கூட பாகிஸ்தானுடன் நாம் அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். உச்சகட்டமாக 2008ம் ஆண்டு மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலையும் கூட நாம் வேடிக்காதனே பார்த்தோம்... எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லையே...இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.
பலத்தை அதிகரிக்க வேண்டும்
பாகிஸ்தானுக்கு எதிராக நமது பலத்தை அதிகரிக்க வேண்டும். ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக, தீவிரவாதத்திற்கு எதிரான பலத்தை நாம் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். 71க்கு முன்பு வரை நமது ராணுவத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட்டு வந்தார்கள். பின்னர் நமது மதச்சார்பின்மையை குறைத்து மதிப்பிட்டனர். பிறகு பொருளாதாரத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் இவை எல்லாவற்றிலும் நாம் முன்னை விட மிகுந்த பலத்துடன் இருக்கிறோம் என்பதை பாகிஸ்தானுக்கு நாம் காட்ட வேண்டும்.
முற்றிலும் மாறியாக வேண்டும்
பாகிஸ்தான் உண்மையிலேயே சமாதானத்தை நாடுகிறது, இந்தியாவுடன் அமைதியாக போக விரும்புகிறது என்றால் அதற்கு அது முற்றிலும் மாறியாக வேண்டும். அதை வைத்து்ததான் நாம் அடுத்த கட்ட அமைதிப் பேச்சுக்களை தொடங்க வேண்டும். அதற்கு இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்- ஒன்று ராணுவத்தை அரசின் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்யாத வகையில் தனித்து விட பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு அல்ல, மாறாக மதச்சகிப்புத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க அந்த நாட்டு மக்களும், அரசும் முன்வர வேண்டும். இதெல்லாம் நடந்தால் நாம் பேசுவது குறித்து யோசிக்கலாம்.
இவற்றையெல்லாம் விட முக்கியமானது - பாகிஸ்தான் இப்படித்தான் இருக்கும், இதுதான் பாகிஸ்தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது எல்லாவற்றையும் விட முக்கியமானது.