திமுக அங்கும் வகிக்கும் மத்திய அரசு இப்படி மக்கள் விரோதமாக செயல்படுவதா... ஜெ. கண்டனம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விலைவாசி உயர்வினாலும் பண வீக்கத்தினாலும் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில், மண்எண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்ற வரிசையில் தற்போது ரயில் கட்டணங்களை வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டிற்கு முன்னதாகவே திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் உயர்தர வகுப்பு, குளிர்சாதன வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு, குளிர்சாதன இருக்கைக்கான கட்டணம், குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்படும் என்றும், குளிர்சாதன வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 6 பைசா உயர்த்தப்படும் என்றும், சாதாரண முதல் வகுப்புக்கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 3 பைசா உயர்த்தப்படும் என்றும், தூங்கும் வசதி கொண்ட வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 6 பைசா உயர்த்தப்படும் என்றும், விரைவு ரயில் இரண்டாம் வகுப்பு கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்படும் என்றும், சாதாரண ரயில் இரண்டாம் வகுப்பு கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 3 பைசா உயர்த்தப்படும் என்றும், புறநகர் ரயிலில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு வரும் 21ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்து இருக்கிறார்.
இது உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். ஏழை, எளிய, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் இந்த ரயில் கட்டண உயர்வுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, விஷம் போல் உயர்ந்து கொண்டேயிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தென் மாநிலங்களை இணைக்கும் மின் தொடர் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், வட்டி வீதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், பொருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த வேளையில், மக்களின் கருத்திற்கு சற்றும் மதிப்பளிக்காமல் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருவது மிகவும் வருந்தத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் கட்டண உயர்வுகள் ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். ரயில் பயணம் என்பது சாமானிய மக்களுக்கு துன்பமாக அமைந்துவிடும். திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது எதிர்ப்பினை தெரிவிப்பதோடு, மக்கள் நலன் கருதி, இந்த கட்டண உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.