பெரியகுளம் அருகே அரசு பேருந்து விபத்து… 2 விவசாயிகள் 35 ஆடுகள் பலி
தேவதானப்பட்டி அருகே தும்பலப்பட்டியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவர்கள் பரஞ்சோதி மற்றும் சந்தானம்.. இவர்கள் ஞாயிறு அதிகாலை நேரத்தில் மேய்ச்சலுக்காக தங்களது 140 ஆடுகளோடு கைலாசப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டே சாத்தாக்கோவில் அருகே சென்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குமுளி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அவர்கள் மீதும் ஆடுகள் மீதும் மோதியது. இதில் சந்தானம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரோடு 35 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த சந்தானத்திற்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பரஞ்சோதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். விபத்து குறித்து கேள்வி பட்ட உடன் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். அதனால் அந்த இடமே சோகமாக காட்சியளித்தது.
விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்து கிருஷ்ணனை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேட்டுப்பாளையம்- குமுளி சாலையில் அடிக்கடி நடைபெறும் இது போன்ற விபத்துக்களை தடுக்க ஆங்காங்கே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.