செல்போன் டவரில் பேட்டரி திருட்டு: போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோடிய கும்பல்
நெல்லை: நெல்லையில் இன்று அதிகாலை சோதனைச் சாவடியில் ஒரு காரை மறித்த போலீசாரை ஆயுதங்களை காட்டி மிரட்டிய கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொல்ல முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் நேற்று மாலை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டார். அக்கொலையில் தொடர்புடைய கும்பல் காரில் ஆயுதங்களுடன் தப்பியதாக கூறப்பட்டதை அடுத்து மாநிலம் முழுக்க விடிய விடிய தீவிர வாகன சோதனை நடந்தது. நெல்லை மாநகர போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழைய பேட்டை போலீஸ் சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன், ஏட்டு அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சிவப்பு கார் ஒன்று வேகமாக வந்தது. அதை போலீசார் மடக்கியபோது காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாள், கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டியது. மேலும் பைக்கில் அமர்ந்திருந்த எஸ்.ஐ.யை காரால் மோதினர்.
இதில் சுதாரித்து தப்பிய எஸ்.ஐ. காரை போலீசாருடன் சேர்ந்து விரட்டிச் சென்றார். கார் மின்னல் வேகத்தில் விரைந்து சென்றதால் பைக்கில் சென்றவாறே அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார் படுத்தினர். இந்த தகவலை கேட்டு நெல்லை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உதயசூரியனும் காரை விரட்டிச் சென்றார். அந்த மர்ம கார் கைலாசபுரம் சாலையில் திரும்பி ஆற்றங்கரை சாலையில் நின்றது. அதில் இருந்து இறங்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
போலீசார் அவர்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து காரை போலீசார் சோதனை போட்டனர். அதில் 10க்கும் மேற்பட்ட செல்போன் டவர் பேட்டரிகள் இருந்தன. காரின் ஆர்.சி. புத்தகத்தில் ஜலாலுதீன், கேரளா என்ற முகவரி இருந்தது. தப்பி ஓடியவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.