ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை: ஆளுநர் உரையில் ரோசய்யா
நடப்பாண்டின் முதலாவது தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:
தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நில அபகரிப்பு முறைகேடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்துக்கான காவிரி நதிநீரை கர்நாடகம் திறந்துவிட மறுத்து வருகிறது. தமிழக அரசு சரியாண தருணத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியது. காவிரியில் கூடுதலான நீரை கர்நாடகா பயன்படுத்தி வருகிறது. காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.காவிரி நதிநீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.
பாக்ஜசலசந்தி கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் அந்நாடுட்டன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தமிழர்களை இனப்படுகொலை செய்யும் விவகாரத்தை இந்திய அரசு சர்வதேசத்தின் முன்பு எடுத்து வைக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவும் அணை மிகவும் வலுவாக இருப்பதாகவே கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்குக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்டியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் "டேம் 999" திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது பாராட்டுக்குரியது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தை தமிழக அரசு ஏற்காது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் கடினமானதாகும். இதை மாநில அரசுகள் மூலமே செயல்படுட்த வேண்டும்.
இதேபோல் மத்திய அரசின் அன்னிய நேரடி முதலீட்டுகான அனுமதியையும் தமிழக அரசு எதிர்க்கிறது.
தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பகுதியில் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வடசென்னையில் அமைக்கப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் மூலமான மின் உற்பத்தி வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.
20-வது தேசிய தடகளப் போட்டி தமிழகத்தில் வரும் ஜுலை மாதம் நடைபெறும். 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம்- 2 விரைவில் வெளியிடப்படும்.
புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்படும்.
நீருக்கு விலை நிர்ணயிக்கும் மத்திய அரசின் முடிவு, மாநில உரிமைகளில் தலையிடும் விஷயமாகும் என்பது உள்ளிட்ட் அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.