தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
தென்காசி: தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்கன் குனியா காய்ச்சல் பரவி அச்சுறுத்தியது. சிக்கன் குனியாவால் ஏராளமானோர் மூட்டு வலியால் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்போது டெங்கு காய்ச்சல், மற்றும் வைரஸ் காய்ச்சல் தாக்கி ஏராளமானோரை காவு வாங்கி வருகிறது. சில வாரங்களாக கட்டுப்பட்டு இருந்த டெங்கு காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கி வருவது பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்காசி மஞ்சம்மாள் சாலை பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வரும் சுரேந்திரன் என்பவரது மனைவி சரஸ்வதிதான் டெங்குகாய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளார். அவர் கடந்த புதன்கிழமை தென்காசி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைக்கு மேல்சிக்சைக்காக சென்றார். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.