அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள்! ஒபாமா வீடு அருகே மாணவி பலி!!
சிகாகோ: அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிகாகோவில் அதிபர் ஒபாமா வீடு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
அதிபர் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோ நகரத்தில் உள்ள வீட்டில் சிறிது தொலைவில் பூங்கா ஒன்று உள்ளது. இதில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி ஹாடியா தமது தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென மாணவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடினான். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த மாணவி ஹாடியா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
துப்பாக்கி சூட்டில் பலியான ஹாடியா, ஒபாமா பதவியேற்பு விழா கலைநிகழ்ச்சியில் பக்கேற்றவர். மாணவியின் மரணத்துக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மர்ம மனிதன் குறி வைத்தது ஹாடியாவை அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
துப்பாக்கிச் சூடுகள்
இதற்கிடையே அரிசோனா மாகாணம் போனிஸ் நகரில் ஒரு தனியார் நிறுவனத்துக்குள் நுழைந்த மர்ம மனிதன் சுட்டதில் அதன் உயர் அதிகாரி ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் அட்லாண்யா, ஷார்ஷியா நகரங்களில் பள்ளிகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கின்றனர்.