கச்சத்தீவில் பிப்.23,24-ல் திருவிழா! தமிழ் அமைப்பினருக்கு தடை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழ் அமைப்பினருக்கு இம்முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இத்திருவிழா நடத்தப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தினரும் சென்று வருகின்றனர். ஆனால் இம்முறை கச்சத்தீவு செல்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழா வரும் 23., 24 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விண்ணப்பம் பெறுபவர்களுக்கு அடையாள சான்றிதழ் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் தவிர பிற மாவட்டத்தினர் தடையில்லா சான்றிதழ் ஒன்றையும் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ் அமைப்பினர் எவருக்கும் கச்சத்தீவு செல்ல அனுமதியில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.