பொட்டு சுரேஷ் கொலை: சுட்டிக்காட்டப்படும் ஐவர் அணி.. எய்தவர் சிக்குவாரா?

பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. போலீஸ் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளது. கொலைக்கான காரணம் அரசியல் பின்னணியும்,கூலிப்படையும்தான் என்று தெரிந்தாலும் அம்புகளை எய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
5பேர் அணி
பொட்டு சுரேஷ் கொலைக்கான காரணமாக அவரது மனைவி சுட்டிக்காட்டிய 5 பேர் ‘அட்டாக்' பாண்டி, மன்னன், மூர்த்தி, எஸ்ஸார் கோபி, உதயகுமார் ஆகியோர்தான் அழகிரியுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இவர்கள் ஐவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கொலையான பொட்டு சுரேஷ் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.
மன்னனுடன் ஒன்றாகப் படித்தவர்
முன்னாள் துணைமேயர் மன்னனுடன், பொட்டு சுரேஷ் ஒன்றாக படித்தவராம். அந்த நெருக்கமே அழகிரியுடன் நெருங்க வைத்துள்ளது.
‘அட்டாக்' உறுதி
இந்த கொலையில் அட்டாக் பாண்டியின் பெயர்தான் முக்கியமாக அடிபடுகிறது. அவரது கூட்டாளிகள் தற்போது சரணடைந்துள்ளனர். மற்ற நான்கு பேரும் தங்களுக்கும், இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடித்து கூறுகின்றனர். அதேசமயத்தில் இந்த கொலையில் அட்டாக் பாண்டி பகடைக்காயாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு இருக்கிறதாம்
ரூ. 4 கோடி கைமாறியது எப்படி?
பொட்டு சுரேஷ் கொலையில் ரூ. 4 கோடி கைமாறியுள்ளதாம். கொலைவழக்கு, நிலமோசடி, ஆள் கடத்தில் போன்ற வழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த அட்டாக் பாண்டிக்கு 4 கோடி ரூபாய் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பும் போலீஸ், இந்த கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
திமுக முக்கியப் புள்ளி யார்?
கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பொட்டு சுரேஷ் திமுகவின் மிக முக்கியமான புள்ளி ஒருவரை மதுரை ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளார். அதனைப் பற்றியும் விசாரிக்கும் போலீஸ், பொட்டு உடன் கொடைக்கானல் போன அவருடைய நண்பர்கள், பாலதம்புராஜ், குமார், ரவிச்சந்திரன், கல்யாணம், சேகர் உள்ளிட்ட 5பேரிடம் விசாரித்ததில் எதுவும் உருப்படியாக சிக்கவில்லை.
துரை தயாநிதியும் வளையத்தில்?
எல்லாவற்றுக்கும் மேலாக போலீஸ் விசாரணையில் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பெயரும் அடிபடுகிறது. துரை தயாநிதியை தேர்தலில் போட்டியிட வைப்பது குறித்து பேசியதாகவும், அதற்கு பொட்டு சுரேஷ் தடை போட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதாரத்தோடு நிரூபிப்போம்
பல கட்ட விசாரணைகளின் அடிப்படையில் போலீஸ் வட்டாரங்களில் பேசிக்கொள்வது என்னவெனில், "பொட்டு' சுரேஷ் கொல்லப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட பட்டாக்கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது. "பொட்டு' சுரேஷுக்குப் பின் தலையில் அதிக வெட்டுக்காயங்கள் இருந்தன. இறந்தது "பொட்டு' சுரேஷ்தானா என்பதை அறிய அவரது ரத்தம் மற்றும் முடியை தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர். ஆகவே தற்போது கைப்பற்றப்பட்ட கத்தியில் ரத்தத்துடன் ஒட்டியிருந்த தலைமுடியை டி.என்.ஏ. உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு உள்படுத்தி வழக்கில் குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கை பொறுத்த மட்டில் அட்டாக் பாண்டி வெறும் பகடைக்காய்தான், அவருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று போலீஸ் கூறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications