அப்ல்சல்குரு தூக்குக்கு எதிர்ப்பு- காஷ்மீரில் போராட்டம்- வீட்டுக் காவலில் ஹூரியத் தலைவர்கள்!
பாரமுல்லா: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் போதான வன்முறையில் இருவர் படுகாயமடைந்தனர்.
அப்சல்குரு தூக்கிலிடப்படும் செய்தி நேற்று இரவே ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இன்று காலை அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும் பாரமுல்லா மற்றும் சோப்பூர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களில் படுகாயமடைந்தோர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு பழிவாங்குவோம் என்று ஹூரியத் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர்களான மிர்வாஸ் உமர் பரூக், சையத் கிலானி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.