மர்ம நோய் தாக்கி செத்து மடியும் மாடுகள்
நெல்லை:நெல்லை மாவட்டம் சுரண்டையில் மர்ம நோய் தாக்கி பால் மாடுகள் செத்து விழுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள இடையார்தவணை, பாண்டியாபுரம், சாம்பவர் வடகரை, கம்பிளி, நாகல்குளம், கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளி்ல் விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் விவசாய தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் பல வீடுகளில் பசுக்கள் வளர்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் பாலை விற்று பிழைத்து வருகின்றனர்.
சுரண்டை அருகே கலிங்கப்பட்டியில் ஒரு வாரமாக பசுக்களை மர்ம நோய் தாக்கி வருகிறது. சினை மாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மாடுகள் வாயில் இருந்து நுரை வருவதுடன் சிறுநீர் ரத்தம் கலந்து வருகிறது. எந்த உணவையும் சாப்பிட முடியாமல் நோய் தாக்கிய 3 நாளில் இறந்து விடுகின்றன.
கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்தும் பலன் இல்லை. இந்த ஊரை சேர்ந்த வேல்சாமி, முருகன், குட்டிசாமி, உடையார் உள்பட 15 மேற்பட்டவர்களின் 20 மாடுகள் மர்ம நோயால் இறந்துள்ளன. இறந்த மாடுகள் ஒவ்வொன்றும் ரூ.45 ஆயிரம் மதிப்புடையவை.
இதுகுறித்து கீழப்பாவூர் ஓன்றிய திமுக செயலர் சுப்பிரமணியன் ,கூறும்போது மர்ம நோயால் மாடுகள் இறந்து வருவது பற்றி கலெக்டரிடம் மற்றும் சுகாதார துறையினரிடம் தெரிவித்துள்ளோம். உடனடியாக இங்கு வந்து மேலும் நோய் பரவாமல் மாடுகளை காப்பாற்ற வேண்டும். இது தவிர மாடுகளே இழநத விவசாயிகளுககு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.