கூடங்குளம் அணுஉலையில் கசிவு? - பீதியில் தென் மாவட்ட மக்கள்
கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு பிரச்சினை குறித்து கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. அணு உலையிலிருந்து அணுக் கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அடிக்கடி கசிவு ஏற்படுவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
நிபுணர்கள் குழுவோ சரியான விளக்கம் சொல்லாமல் சமாளித்து வருகின்றனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு கேட்ட வெள்ளை அறிக்கையையும் தர முடியவில்லை அணு உலை நிர்வாகத்தால்.
இந்த நிலையில் குமரி மாவட்ட பொதுமக்கள் சிலரின் செல்போனுக்கு நேற்றிரவு ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது.
அதில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இன்று இரவு மின்உற்பத்தி சோதனை செய்யப்படுகிறது. இதனால் அணு உலையில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த எஸ்.எம்.எஸ். தகவல் குமரி மாவட்ட பொது மக்களிடையே வேகமாக பரவியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்தனர்.
குறிப்பாக மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து வந்து விட்டனர்.
மேலும் அணு உலையால் விபத்து ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
இந்த நிலையில் அடுத்து நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குளி, பெருமணல் பகுதி பொதுமக்களுக்கு நேற்றிரவு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ்.வந்தது.
அதில், 'அணு உலைக்கு கொண்டு வரப்பட்ட முக்கியமான பொருளில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் வரை பலியாகி விட்டனர்' என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள் வீட்டை விட்டே வெளியேறினர். அவர்கள் நேற்றிரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர்.
இன்று காலை செல்போனில் பரவிய எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி என்று தெரிய வந்ததும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் இந்த வதந்தியால் அணு உலையில் வேலைபார்த்து வரும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இன்று வேலைக்கு செல்லவில்லை. தொடர்ந்து நெல்லை, குமரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.