அதிமுக ஆட்சியில் உ.வே.சா நினைவில்லத்தின் கதி என்ன தெரியுமா?... கருணாநிதி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் வாழ்ந்த உத்தமதானபுரம் இல்லத்தை 1.37 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அங்கே 23 லட்சம் ரூபாய் செலவில் நினைவு இல்லம் எழுப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவு என்று 18.7.2005 தேதிய ஏடுகளில் செய்தி விளம் பரப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே 1994-ம் ஆண்டில் ஒரு முறை இதே ஜெயலலிதா, உ.வே. சாமிநாத அய்யர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்கி 11.50 லட்சம் ரூபாய் செலவில் நினைவு இல்லமாக்க ஆணையிட்டு ஏடுகளில் அப்போதே பெரிதாக வெளி வந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் நினைவில்லம் திறக்கப்படவில்லை.
ஆனால் 20.2.2008 அன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்; தான் ஆட்சியிலே இருந்த போது உ.வே.சா. நினைவில்லப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகியும் பணிகள் நிறைவடையாமல் இருக்கின்றன என்றும், அவரது நினைவு நாளான 28.4.2008 அன்றாவது நினைவு இல்லம் திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டதோடு, அதற்காக 28.2.2008 அன்று தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்.
உண்மையில் உ.வே.சா.வின் நினைவில்லப் பணிகள் கழக ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தன. அந்த உண்மை தெரியாமல் ஜெயலலிதா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அப்போது ஆணையிட்டார். 27.4.2008 அன்று உ.வே.சா.வின் நினைவு நாளுக்கு முதல் நாளே அன்றைய கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி, செய்தித்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி தலைமையில் உ.வேசா. நினைவு இல்லத்தினைத் திறந்து வைத்தார். அ.தி.மு.க. ஆட்சியில், அந்த உ.வே.சா. நினைவு இல்லத்தின் இன்றைய கதி என்ன தெரியுமா?
உ.வே.சா. நினைவில்லம் முறையான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. அந்த இல்லத்தைப் பராமரிக்க ஒரு ஊழியர் கூட இல்லாத நிலையில் உள்ளது. இந்த இல்லத்தைப் பராமரிப்பதற்காக இருந்த ஊழியர், பதவி உயர்வு பெற்று ஓசூர் சென்றதில் இருந்து, அந்த இல்லம் பூட்டியே கிடக்கிறது. அந்த இல்லத்திற்குப் பக்கத்திலே உள்ளவர்களிடம் பேசும் போது, உ.வே.சா. வாழ்ந்த வீடு தி.மு.கழக ஆட்சியில் திறக்கப்பட்டது என்பதால் பராமரிப்பின்றி கிடக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும், இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
கழக ஆட்சியில் உ.வே.சா. நினைவில்லத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க. அரசு, இனியாவது அந்த உ.வே.சா. நினைவில்லம் மூடிக்கிடக்கின்ற நிலையினைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.