எஸ்கேப் செய்தி.... தினமலருக்கு எதிராக கலாநிதிமாறன் வழக்கு: ஹைகோர்ட் தள்ளுபடி
தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ, வணிகத்தைப் பற்றியே, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட, தடை கோரி, கலாநிதி மாறன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தினமலர் நாளிதழில், ‘எஸ்கேப்' என்கிற தலைப்பில், என்னைப் பற்றிய அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி, பொய்யானது. எனது, குடும்பத்தினரின் புகழை, குலைக்கும் நோக்கில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில், தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு எதிராக, வினியோகஸ்தர் ஒருவர், புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின்படி, போலீஸ் விசாரணைக்காக, என்னை அழைத்தனர்.
அதில் குறிப்பிட்டிருந்த தேதியில் ஆஜராக இயலாது என்றும், வேறு தேதியில் ஆஜராகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்தேன்.
இந்த உண்மை நிலையை ஆராயாமல் தினமலர் பத்திரிகையில், ‘எஸ்கேப்' என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவதூறு செய்தி வெளியிட்டதற்காக இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளேன். அந்த வழக்கு முடியும் வரை, என்னைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி, வர்த்தகத்தைப் பற்றி, என்னிடம் உண்மைத் தன்மையை ஆராயாமல், எந்த செய்தியும் வெளியிட, தினமலர் நாளிதழுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.சர்மா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனது தீர்ப்பில், வெளியான செய்தி உண்மையானது அல்ல என்பதை, மனுதாரர் இன்னும் நிரூபிக்க வேண்டியதுள்ளது.
எனவே, மனுதாரர் கோரியபடி, அவரைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, வணிகத்தைப் பற்றி, தினமலர் நாளிதழில் எந்த செய்தியும் வெளியிட முடியாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.