பாலச்சந்திரன் படுகொலைக்கு கண்டனம்- ஜெ. நடவடிக்கையை பாராட்டுகிறது பஞ்சாப்பின் 'டல் கல்சா' கட்சி!
இது தொடர்பாக டல் கல்சா கட்சியின் தலைவர் தாமி கூறுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டைவேடம் காட்டி வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். இலங்கை இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு சாட்சியமாக இருப்பது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்த காட்சிகள்தான். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அடுத்த மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க தீர்மானத்துக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியா அமைதிகாத்து வருவது வேதனையளிக்கிறது.
இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அவர் மிகவும் உறுதியான பெண்மணி. ஏற்கெனவே ராஜிவ் வழக்கில் தூக்கு மேடையில் நிற்போருக்கான தண்டனையை ரத்து செய்ய சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்றார் அவர்.