ஹைதராபாத்திலும் தொடர் குண்டுவெடிப்புக்கு சதியா?: நேபாளம் தப்ப முயன்றோரிடம் இருந்து திடுக் தகவல்

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பத்தில் ஈடுபட்டோரைப் பிடிக்க தேசியப் புலனாய்வு முகாமையகம் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. சந்தேக நபர்கள் நாட்டைவிட்டு எந்த வழியிலும் தப்பி சென்றுவிடாதபடி அனைத்து பகுதிகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் பீகார்ம் மாநிலத்தின் ரக்ஸுல் எல்லையில் தரைவழியே நேபாளத்துக்குள் செல்ல முயன்ற முக்மது அப்துல்லா ஓமன் என்ற சோமாலிய நாட்டவரையும் முகமது ஆலம் என்ற பீகாரியும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருவரும் ஹைதராபாத்திலிருந்து தாங்கள் வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சோமாலியாவைச் சேர்ந்த ஓமன், ஜெர்மனியில் அகதியாக தஞ்சமடைந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றிருக்கிறார். அவரிடம் பிரான்சு சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இருந்திருக்கின்றன. ஓமன் கடந்த ஜனவரி மாதம் காத்மண்டு வந்து அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் இந்தியாவுக்குள் பயணம் செய்வதற்கான உரிய விசா எதுவும் அவரிடம் இல்லை.
மற்றொரு நபரான முகமது ஆலம் என்ற 25 வயது இளைஞர் பீகாரைச் சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் அப்துல் ஓமர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரிடம் இருந்த லைசென்ஸ் முகவரி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் என்ன காரணத்துக்காக ஹைதராபாத்தைவிட்டு வெளியேறி பீகார் எல்லையில் தரைவழியே நேபாளத்துக்கு செல்ல முயன்றனர் என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களிடம் நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தின் செகந்திராபாத் நிலையத்தை பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
தற்போது பீகார் போலீசாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நாசவேலைக்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனரா? அல்லது சதித் திட்டத்துக்கு உடந்தையாக இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் முதலில் குண்டுவைக்க சதிகாரர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வந்ததால் அத்திட்டம் நிறைவேறவில்லை என்று கூறப்பட்டது.
தற்போது செகந்திராபாத் ரயில் நிலைய காட்சிகளை சந்தேக நபர்கள் படம் பிடித்திருக்கின்றனர். இதனால் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு போல ஹைதராபாத்தில் ஒரு தொடர் குண்டுவெடிப்புக்கு திட்டம் தீட்டப்பட்டதா? அல்லது தொடர் குண்டுவெடிப்புக்கு சதி தீட்டப்படுகிறதா? என்பது பற்றியும் தேசிய புலனாய்வு முகாமையகம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications