அச்சம் தவிர்…. தைரியமாக தேர்வு எழுது: + 2 மாணவர்களுக்கு வைகோ அறிவுரை
சென்னை: தேர்வு மையத்தில் அச்சமும், பதட்டமும், தயக்கமும் இன்றி அமைதியான மனம், புத்துணர்ச்சியோடு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதுங்கள் என்று ப்ளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
12 ஆண்டு கால பள்ளிப் படிப்பை முடித்து மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் இன்ன பிற கல்லூரிக் கனவுகளோடு மேல்நிலைத் தேர்வினை எதிர்நோக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே! தேர்வு என்பது எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு. எனவே, உரிய கால எல்லைக்குள் தேர்வுகளை எழுதி நேர மேலாண்மையைக் கடைப்பிடியுங்கள்.
தேர்வு எழுதும் மாணவக் கண்மணிகள் உடல்நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது அவசியம். தேர்வு மையத்தில் அச்சமும், பதட்டமும், தயக்கமும் இன்றி அமைதியான மனம், புத்துணர்ச்சியோடு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதுவது என்பதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
எதிர்மறையான எந்தச் சிந்தனைக்கும் இடம் தர வேண்டாம். பாட ஆசிரியர்கள் கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றி எளிதாக தேர்வை எதிர்கொள்ளுங்கள். மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி என்ற இலக்கினை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
அதன்மூலம் உங்களை ஈன்றெடுத்து சான்றோராக்கி அழகு பார்க்கத் துடிக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்களை வார்ப்பித்த ஆசிரியப் பெருமக்களுக்கும், தயார்படுத்திய பள்ளிகளுக்கும் உங்களது அறிவை, ஆற்றலை, பணியைப் பயன் படுத்தக் காத்திருக்கும் சமுதாயத்திற்கும் நற்பெயரை ஈட்டிக் கொடுத்து பூமிப் பந்தில் நிகரற்ற வெற்றியை ஈட்டிட வாழ்த்துகிறேன்"என்று வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.