டீசல் பிடிக்க 'கியூ'வில் காத்திருக்கும் அரசுப் பேருந்துகள்... பெரும் பாதிப்பில் பயணிகள்!
சென்னை: அரசுப் பேருந்துகள் டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து டீசல் நிரப்புவதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் மொத்த டீசல் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 என்று உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. மேலும், இனிமேல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பங்குளில் டீசல் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தற்போது தனியார் பெட்ரோல் பங்குகளுக்கு வந்து அரசுப் பேருந்துகள் டீசல் போட்டு வருகின்றன. பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் டீசல் நிரப்பப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அப்படித்தான் ஆரம்பத்தில் செய்தும் வந்தனர். ஆனால் தற்போது பயணிகளுடன் பெட்ரோல் பங்குகளுக்கு நகரப் பேருந்துகள் வந்து டீசல் போடக் காத்திருப்பது தொடர் கதையாகியுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் புதன்கிழமை பகல் 12 மணிக்கு 10 மாநகர பஸ்கள் அரை மணி நேரத்துக்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து டீசல் நிரப்பின. இதனால் அதில் அமர்ந்திருந்த பயணிகள் கடும் எரிச்சலுக்குள்ளானார்கள்.
கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்திலிருந்து பிராட்வே, அண்ணா சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 15பி, 15ஜி, 27பி ஆகிய வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் இதுபோன்று அரை மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து டீசல் நிரப்பிச் சென்றன.
இப்படிப் பகல் நேரங்களில் அரை மணி நேரத்திற்கும் குறையாமல் அரசுப் பேருந்துகள் டீசல் போட நிற்பதால் தங்களது வேலை கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் பலர் குமுறுகின்றனர்.
ஆனால் இதற்கு வேறு ஒரு காரணத்தை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறுகையில், அதிகாலை நேரங்களில் டீசல் நிரப்பினால், டீசலின் அடர்த்தி சற்று குறையும். இதன் காரணமாகவே பகல் நேரங்களில் டீசல் நிரப்பப்படுகிறது.
சில பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குகள் டீசலை மொத்தமாக மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொடுத்து வருகின்றன. மேலும் சில பங்க்குகள் மொத்தமாகத் தர ஒப்புக்கொண்டுள்ளன. எனவே, பஸ்கள் பங்க்குகளில் காத்திருப்பது படிப்படியாக குறைக்கப்படும் என்றார்கள்.
வெயில் காலம் வேகமாக வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இப்படி பயணிகளை தகிக்கும் வெயிலில் பெட்ரோல் பங்குகளில் காக்க வைப்பதை போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்த முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.