மன்மோகன்சிங்கை ஐமு கூட்டணி 'நைட் வாட்ச்மேனாக' நியமித்திருக்கிறது: மோடி 'பொளேர்'
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிரதமர் மன்மோகன்சிங்கை நைட் வாட்ச்மேனாக நியமித்திருக்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தமது உரையில் மோடியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான அருண்ஜேட்லியும் மோடியை பிரதமர் வேட்பாளராக்க ஆதரவு தெரிவித்திருந்தார்.

இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றினார் மோடி தமது உரையில் காங்கிரஸ் கட்சியையும் சோனியா காநதி குடும்பத்து அரசியலையும் கடுமையாக சாடினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் பிரணாப் முகர்ஜிதான். ஆனால் அவரை பிரதமராக்காமல் மன்மோகன்சிங்கை பதவியில் உட்கார வைத்தனர். ஏனெனில் பிரணாப் முகர்ஜி பிரதமரானால் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் கிடைக்காமல் போய்விடும். இதனால்தான் அந்த குடும்பம் ஆட்டுவிக்கும் பொம்மையான மன்மோகன்சிங் பிரதமராக உட்கார வைக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நைட் வாட்ச்மேனாகத்தான் பிரதமர் மன்மோகன்சிங்கை நியமித்திருக்கின்றனர்.
நாட்டின் நலனில் அக்கறையற்றவர் மன்மோகன்சிங். மக்களோடு தொடர்பில்லாத ஒரு அரசாக மன்மோகன்சிங் அரசு செயல்படுகிறது. கடந்த 30 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்துவிட்டது. நாட்டின் நன்மதிப்பையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாசமாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி 'குடும்ப' அரசியலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக நாட்டையே காங்கிரஸ் கட்சி பலி கொடுத்துவிட்டது என்றும் சாடினார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து பேசிய மோடி, அங்கு நடப்பது என் ஆட்சி அல்ல.. பாரதிய ஜனதாவின் ஆட்சி.. இந்த வெற்றி என்னால் மட்டுமே சாத்தியமானது அல்ல.. லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களால் சாத்தியமானது. ஒரு சிறந்த அரசியல்வாதியால் நாட்டின் தலை எழுத்தை மாற்றி அமைக்க முடியும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செலுத்தக் கூடிய மாநிலங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நாட்டின் உண்மையான பிரதமர் யார் என்றால் வாஜ்பாய் மட்டும்தான் என்றார்.
இதேபோல் காங்கிரஸை இந்த நாட்டு மக்கள் தூக்கி எறியத் தயாராகிவிட்டனர். எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்த நாட்டுக்கு நன்மை செய்வோம் என்றும் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications