சமாஜ்வாடியை உள்ளே இழுக்கும் காங்.. முலாயமை சமாதானப்படுத்த பேனியை காவு கொடுக்கவும் ரெடி
டெல்லி: திமுக கூட்டணியை விட்டு விலகி விட்டதால் ஆட்டம் கண்டுள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழாமல் தவிர்க்கும் வகையிலும் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க தீர்மானித்துள்ளது. இதற்காக முலாயம் சிங்கை தீவிரவாதி என்று விமர்சித்த அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவையும் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டி விடவும் அது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசியுள்ளார். அதேபோல பேனி பிரசாத் வர்மாவும் பிரதமரை சந்தித்துள்ளார். சமாஜ்வாடியை உள்ளே இழுக்க பேனியை காவு கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்து விட்டதாக கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய பேனி பிரசாத் வர்மா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார். ரவுடியாகவும் கொள்ளைக்காரனாகவும் வலம் வரும் அவர் மாநிலத்தை எப்படி காப்பாற்றுவார்? என்று கூறியிருந்தார். இதனால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கொந்தளித்துப் போய் பேனி பிரசாத்தை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து ஆரம்பத்தில் காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பேனியை கண்டித்தது, நாடாளுமன்றத்தில் முலாயமிடம் மன்னிப்பும்கேட்டது. ஆனால் பேனி பதவி விலகல் குறித்து அது பேசாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக திமுக கூட்டணியை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் ஷாக் ஆகியுள்ளது. இந்த நிலையில் தற்போது முலாயம் மற்றும் மாயாவதியிடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை,.
எனவே பேனியை காவு கொடுத்து அனுப்பி விட்டு முலாயம் சிங்கை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முலாயம் ஒத்து வருவாரா அல்லது இப்போது போலவே வெளியிலிருந்து ஆதரவு தொடரும் என்று கூறுவாரா என்று தெரியவில்லை.
மன்னிப்பு கேட்ட பேனி
இதற்கிடையே, பேனி பிரசாத் வர்மா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,முலாயம் சிங் மரியாதைக்குரிய தலைவர். அவரை நான் அவதூறு செய்ய விரும்பவில்லை. எனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்கிறேன், வருத்தப்படுகிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
லோக்சபாவில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சிக்கு 22 எம்.பிக்கள் உள்ளனர். அதேபோல மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பிக்கள் உள்ளனர். எனவே இரு கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸுக்கு முக்கியம். தற்போது இருவரும் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். ஆனாலும் ஏதாவது பேரம் பேசியபடிதான் இருப்பார்கள் என்பதால் நித்திய கண்டம் பூரணாயுசு போலத்தான்.
தற்போது திமுக விலகி விட்டதால் இந்த இரண்டு பேரின் ஆதரவும் காங்கிரஸுக்கு கண்டிப்பாக தேவை. எனவேதான் முலாயமை பேசாமல் கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம், மாயாவதியை உள்ளே இழுக்காது காங்கிரஸ். அவரும் வர மாட்டார். அவர் வந்தாலும் முலாயம் அதை விரும்ப மாட்டார். எனவே மாயாவதியை எப்படி தாஜா செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து வெளியிலிருந்து தொடர்ந்து ஆதரவை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது.
வெவஸ்தை கெட்ட அரசியல்னு மனசுல தோணுதுதானே...!












Click it and Unblock the Notifications