திமுக அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டது: ப.சிதம்பரம்.. பதிலடியை ஆரம்பித்தது காங்கிரஸ்

இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ப.சிதம்பரம், 18ம் தேதி இரவு நானும் அமைச்சர்கள் ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சென்னைக்குச் சென்று திமுக தலைவர் கருணாநிதியையும் அவரது சகாக்களையும் சந்தித்தோம்.
அந்தச் சந்திப்பின் இறுதியில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.
இதையடுத்து நாங்கள் 18ம் தேதி நள்ளிரவு டெல்லிக்குத் திரும்பினோம். 19ம் தேதி, அதாவது நேற்று காலை, இந்தக் கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோதே, சென்னையில் நிருபர்களை சந்தித்த கருணாநிதி, மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
18ம் தேதி இரவுக்கும் 19ம் தேதி காலைக்கும் இடையே என்ன நடந்துவிட்டது, எதற்காக திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டது என்று எங்களுக்குத் தெரியாது.
அதே போல நேற்று காலை முதல் பிரதமரும் மூத்த அமைச்சர்களும் தலைவர்களும் இந்த விவகாரம் குறித்தும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது சாத்தியமா என்பது குறித்தும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்தும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது சாத்தியமா என்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பல கட்சிகள் இதை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே நேற்றிரவு திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் தந்துவிட்டனர்.
18ம் தேதி இரவுக்கும் 19ம் தேதி இரவுக்கும் இடையே அப்படி என்ற நடந்துவிட்டது, எதற்காக திமுக மீண்டும் தனது நிலையை மாற்றிக் கொண்டது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
ஜெனீவா ஐ.நா. கிளைக்கான இந்தியப் பிரதிநிதி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் அமெரிக்கத் தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
திமுகவைப் போலவே தமிழக முதல்வரும் ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதையும் பரிசீலனை செய்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது. தீர்மானம் வலுவானதாக நிறைவேற்றப்படும். திமுக விடுத்த கோரிக்கையின் பேரிலும், தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் பேரிலும் அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம் என்றார் ப.சிதம்பரம்.
இலங்கையில் இறுதிப் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, ஆட்சியில் இருந்த கருணாநிதி அப்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பிரச்சனை கிளப்புவது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தருவதற்குத் தானே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு,
திமுகவின் அரசியல் தொடர்பாக நான் இப்போது எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் சிதம்பரம்.
தனது டெல்லி பிரஸ்மீட்டில் முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் பேசினார் சிதம்பரம்.
ஜெனீவா ஐ.நா. கிளைக்கான இந்தியப் பிரதிநிதி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அவருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications