சத்துணவில் பிரியாணி, புலவ், முட்டை மசாலா வழங்கும் திட்டம் இன்று துவக்கம்
சென்னை: தமிழகத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இன்று முதல் 13 வகை உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும், அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் 13 வகையான உணவும், 4 வகை முட்டை மசாலாவும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த திட்டம் இன்று தமிழகத்தில் உள்ள 32 வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு வந்த அமைச்சர் வளர்மதி மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
இந்த புதிய திட்டத்தின்படி மாதாமாதம் 1 மற்றும் 3வது வாரத்தில் திங்கட்கிழமை தோறும் காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத் தூள் முட்டை, செவ்வாய்கிழமை தோறும் கொண்டைகடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா, புதன்கிழமை தோறும் தக்காளி சாதம் மற்றும் மிளகுத் தூள் முட்டை வழங்கப்படும்.
இதே போன்று வியாழக்கிழமை தோறும் சாதம், சாம்பார் மற்றும் வேக வைத்த முட்டை, வெள்ளிக்கிழமை தோறும் கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் உருளைக்கிழங்கு பொறியல் ஆகியவை வழங்கப்படும்.
மேலும் 2வது மற்றும் 4வது வாரங்களில் திங்கட்கிழமை தோறும் சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய் கிழமை தோறும் மீல்மேக்கர், காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத் தூள் முட்டை, புதன்கிழமை தோறும் புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா வழங்கப்படும்.
வியாழக்கிழமை தோறும் எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல், வெள்ளிக்கிழமை தோறும் சாதம், சாம்பார், வேக வைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல் வழங்கப்படும்.
இந்த திட்டம் முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வட்டாரம் வீதம் 32 வட்டாரங்களில் இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக பிற வட்டாரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications