சீனா உதவியுடன் பாகிஸ்தானில் அணுஉலை? - குற்றம் சாட்டும் அமெரிக்கா!
இஸ்லாமபாத்: சீனாவின் தொழில் நுட்ப உதவியுடன் பாகிஸ்தானில் மூன்றாவது அணு உலை கட்டப்பட்டு வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் உள்ள சாஷ்மாவில் 2 அணுஉலைகள் உள்ளன. தற்போது 3-வது அணு உலை அங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சீனா ரகசியமாக தொழில் நுட்ப உதவிகள் செய்து வருவதாக அமெரிக் காவின் உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தகவலை தி வாஷிங்டன் ஃப்ரி பேகன் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனின் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் 18-ந் தேதிக்குள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அணுசக்தித்துறை பிரதிநிதிகளை சந்திந்து ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் சாஷ்மாவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி உலையை நிறுவுவது என திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அங்கு 2 அணு உலைகளும் சீன தொழில் நுட்பத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து சீனாவோ, பாகிஸ்தானோ எந்த வித பதிலும் அளிக்கவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை. அதே சமயம் அணு ஆயுதங்களையோ, தொழில் நுட்ப உதவிகளையோ வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவும் இல்லை என்று சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிஸ்கு அணு உலை கட்டுவது தொடர்பான உதவியோ, வேறு ஏதோனும் அணு ஆயுத உதவியோ சீனா வழங்கியிருக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் தொடங்கும் என்.எஸ்.ஜி மாநாட்டில் எதிரொலிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இலங்கைக்கு ஆயுத உதவி, பாகிஸ்தானில் அணு உலைக்கு உதவி என சீனா மெல்ல மெல்ல இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக இந்தியாவின் கருத்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications