உயிருக்கு ஆபத்து இருந்தாலும் நாளை பாக். திரும்புவேன்: பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அதிபரானார். அவர் பதவியில் இருந்த காலத்தில் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் முஷாரப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் தலிபான்களுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார். இது போன்ற சம்பவங்களால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் முதலில் தஞ்சமடைந்தார் முஷாரப். பின்னர் இங்கிலாந்து சென்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மே 11-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாம் போட்டியிடப் போவதாகவும் தமது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை வெற்றி பெறச் செய்வதற்காகவும் நாடு திரும்புவேன் என்று அறிவித்திருந்தார். இதற்காக தம் மீதான வழக்குகளில் அவர் முன் ஜாமீனும் பெற்றிருக்கிறார்.
ஆனால் முஷாரப் நாடு திரும்பினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், முஷாரப்பை படுகொலை செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முஷாரப்பை நெருங்கிவிட்டனர். நிச்சயம் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் தாம் திட்டமிட்டபடி நாளை நாடு திரும்பப் போவதாக அறிவித்திருக்கிறார். "எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரியும். இதை உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் நிச்சயம் நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications