மல்லையாவின் ரூ. 7,000 கோடி கடன்.. ரூ. 38.50 கோடி மட்டும் திரட்டிய வங்கிகள்
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் அவருக்குச் சொந்தமான மங்களூர் கெமிக்கல்ஸ் உர நிறுவனத்தின் 1 கோடி பங்குகளை ரூ. 38.50 கோடிக்கு மல்லையாவின் எதிர்ப்பையும் மீறி விற்றுவிட்டன. இந்தப் பங்குகளை சுவாரி உர நிறுவனம் வாங்கிவிட்டது.
கிங்பிஷருக்கு ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இணைந்து ரூ. 7,000 கோடி வரை கடன் வழங்கியுள்ளன. இதற்கு வட்டியும் கட்டாமல், பணத்தையும் செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறார் மல்லையா. இதற்கிடையே கிங்பிஷர் விமான நிறுவனத்தின் லைசென்சும் ரத்து செய்யப்பட்டு அந்த நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.
ரூ. 38.50 கோடி தான் வந்தது...
இதையடுத்து மல்லையா இந்தக் கடனுக்காக கொடுத்த ஜாமீன் சொத்துக்களை விற்கும் வேலையில் வங்கிகள் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக அவருக்குச் சொந்தமான மங்களூர் கெமிக்கல்ஸ் உர நிறுவனத்தின் 1 கோடி பங்குகளை விற்க இந்த வங்கிகள் திட்டமிட்டன. இதை எதிர்த்து மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்தப் பங்குகளை சுவாரி உர நிறுவனத்துக்கு அந்த வங்கிகள் விற்றுள்ளன. ஆனால், இதன்மூலம் ரூ. 38.50 கோடி தான் கிடைத்துள்ளது. அதே போல மல்லையாவின் மதுபான ஆலையான யுனைட்டர் பிரூவரீஸ் நிறுவனத்தின் ஜாமீன் பங்குகளையும் வங்கிகள் விற்க ஆரம்பித்துள்ளன.
அதே நேரத்தில் மல்லையாவும் சுவாரி நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்துத் தான் இந்தப் பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக மல்லையா தரப்பு கூறுகிறது.
விலைக்கு வரும் மல்லையாவின் வில்லா..
இந் நிலையில் கோவாவில் உள்ள மல்லையாவின் வில்லாவையும், மும்பையில் உள்ள கிங்பிஷர் நிறுவன தலைமையகக் கட்டடத்தையும் விற்கப் போவதாக (இவையும் விமான நிறுவனத்துக்கு தரப்பட்ட கடனுக்காக ஜாமீனாக வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டவை) வங்கிகள் அறிவித்துள்ளன. இதன்மூலம் ரூ. 400 கோடி வரை கிடைக்குமாம்.
மேலும் மல்லையாவின் யுனைட்டர் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளும் வங்கிகளிடம் ஜாமீனாக உள்ளன. இதையும் விற்றால் இன்னொரு ரூ. 500 கோடி கிடைக்கும்.
ரூ. 6,000 கோடி கோவிந்தா...
மொத்தத்தில் மல்லையா கொடுத்த ஜாமீனை வைத்து ரூ. 1,000 கோடி தான் திரட்ட முடியும். மிச்சமுள்ள ரூ. 6,000 கோடியை அவரிடமிருந்து வங்கிகள் எப்போது மீட்கப் போகின்றனவோ தெரியவில்லை.
இதில் பொதுத்துறை வங்கிகளின் பணம் தான் அதிகமாகும். அதாவது மக்களின் பணம். இதைத்தான் மல்லையா கடனாக வாங்கி ஸ்வாகா செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டி மிரட்டல்.. கிங்பிஷர் ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம்..
இந் நிலையில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இந்தப் போட்டிகளின்போது மைதானங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்வோம் என கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் மிரட்டியதையடுத்து அவர்களுக்கு 2 மாத சம்பளத்தை மட்டும் நேற்று வழங்கியுள்ளது அந்த நிறுவனம்.
மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் போராட்டம் நடந்து அதை உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவிட்டால் கேவலமாகிவிடும் என்பதால் கொஞ்சம் சம்பளத்தை செட்டில் செய்துள்ளார் மல்லையா.