தைவானில் வெள்ளம்.. தமிழகத்தில் இலவச லேப் டாப் வழங்குவது லேட் ஆகிறது..: ஜெயலலிதா
சட்டசபையில் இன்று உயர் கல்வி துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கோவி.செழியன், மாணவர்களை இந்த அரசு பாதுகாக்கவில்லை. இலவச மடிக் கணினி மாணவர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்றார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பதிலளிக்கையில், மாணவர்களை திமுக அரசு பாதுகாத்ததாக உறுப்பினர் இங்கு குறிப்பிட்டார். கடந்த திமுக ஆட்சியில் எந்த லட்சணத்தில் மாணவர்களை காத்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
சென்னையில் கல்லூரி மாணவர்களை வைத்தே மாணவர்களை அடித்து உயிரே போய் விடும் அளவுக்கு குற்றுயிரும், கொலையுறுமாக கிடந்தார்கள். மாணவர்களை திமுக அரசு எப்படி பாதுகாத்தது என்பதை இந்த நாடே தொலைக்காட்சிகள் மூலம் பார்த்தது.
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி தரும் என்று அரசு அறிவித்தது. இதுதான் அரசின் திட்டம். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்கு அரசும் தயாராக இருக்கிறது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் தயாராக இல்லை. அவர்களால் ஒரே நேரத்தில் மொத்தமாக மடிக் கணினியை தயாரித்து கொடுக்க முடியவில்லை.
படிப்படியாகத்தான் அவர்களால் சப்ளை செய்ய முடிகிறது. தைவான் நாட்டில் இருந்து மடிக் கணினிக்கு தேவையான ஹார்ட் டிஸ்க் வரவழைக்கப்படுகிறது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல மாதங்களாக ஹார்ட் டிஸ்க் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனால் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இந்த அரசு மடிக் கணினியை ஒரே நேரத்தில் வழங்க தயாராக இருக்கிறது. ஆனால் மடிக் கணினி வர தாமதமாவதால் அவை வர வர வழங்கி கொண்டு இருக்கிறோம் என்றார் ஜெயலலிதா.