கணேஷ்குமார் ரூ.22 கோடி நஷ்டஈடு தரவேண்டும்: மனைவி யாமினி வழக்கு
கேரள காங்கிரஸ் கூட்டணி அரசில் வனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் கணேஷ்குமார். இவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மனைவி தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் கணேஷ்குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், மகன் நண்பரின் தாயுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பெண்ணின் கணவர் வீடு புகுந்து கணேஷ்குமாரை தாக்கியதாகவும், கணேஷ் குமாரின் மனைவி யாமினி தங்கச்சி பரபரப்பு புகார் கூறினார். திருமணமாகி 16 ஆண்டுகளாக கணேஷ்குமார் தன்னை சித்ரவதை செய்வதாகவும் பரபரப்பு பேட்டி அளித்தார்.
எதிர்க்கட்சிகள் நெருக்கடி காரணமாக கணேஷ்குமாரின் மனைவி யாமினிதங்கச்சி அளித்த புகார் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கணேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்நிலையில் கணேஷ் குமாரின் மனைவி யாமினி தங்கச்சி நேற்று திருவனந்தபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், கணேஷ்குமார் தனக்கு இழைத்த கொடுமைகளுக்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் ரூ.22 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று கூறி இருந்தார்.
இதுபற்றி தெரிய வந்ததும் கணேஷ்குமார் தரப்பிலும் அதே நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், யாமினி தங்கச்சி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடை பெறும்போது, கணேஷ்குமார் தரப்பு வாதத்தையும், கேட்ட பின்பே முடிவெடுக்க வேண்டுமென்று கூறி இருந்தார்.
இரு தரப்பு மனுக்களையும் பெற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக நேற்று விசாரணை நடத்தியது. அப்போது யாமினிதங்கச்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யாமினி தற்போது குடியிருந்து வரும் திருவனந்தபுரம் வழுதகாடு வீட்டில் இருந்து எக்காரணம் கொண்டும் அவரை வெளியேற்றக் கூடாது, அந்த வீட்டுக்கு கணேஷ்குமார் செல்லக் கூடாது என்றார்.
மேலும் சென்னையில் உள்ள கணேஷ்குமார் வீட்டை யாமினிக்கு வழங்க வேண்டும், யாமினியின் செலவுக்கு ரூ.2 கோடி அளிக்க வேண்டும், அவருக்கு இதுவரை செய்த கொடுமைகளுக்காகவும், சித்ரவதைக்காகவும், அவருக்கு ரூ.20 கோடி நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த கணேஷ்குமாரின் வழக்கறிஞர், திருவனந்தபுரம் வழுதகாடு வீட்டிலிருந்து யாமினியை வெளியேற்ற மாட்டோம், அவருக்கு எந்த விதத்திலும் கணேஷ்குமார் தொந்தரவு கொடுக்க மாட்டார் என்று கூறினார். வழக்கறிஞரின் பதிலை கோர்ட்டு பதிவு செய்வதாக தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்தார்.