மீண்டும் பிரதமரா? யூகங்களுக்கெல்லாம் பதில் இல்லை: மன்மோகன்சிங்
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.அப்போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பீர்களாக என்று கேட்கப்பட்டது. அதற்கு, அதைப் பற்றி எல்லாம் சொல்ல முடியாது.. யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. இன்னும் தற்போதைய ஆட்சிக்காலமே முடியவில்லை என்று கூறினார்.
ஆனால் ராகுல் காந்தி பிரதமர் ஆவதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஆமாம், எப்பொழுதுமே.. என்றார். டெல்லியில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கில் ராகுலின் பேச்சு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு சிறப்பாக இருந்தது என்றார் அவர். மேலும் மத்தியில் இரட்டை அதிகாரம் என்ற நிலை இருப்பதாக எழும் புகார் குறித்து கேட்டதற்கு, இதுபற்றி விவாதிப்பதே தேவையில்லாதது என்றார்.
அண்மையில் டர்பனில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது செய்தியாளர்கள் இதேபோல் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மீண்டும் பிரதமராவீர்களா என்று கேட்டதற்கு இதே பதிலைத்தான் அதாவது யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். இதை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. பிரதமர் பதவி மீதான ஆசை மன்மோகன்சிங்குக்கு விட்டுப் போகவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் அதே பதிலை பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதால் மீண்டும் விமர்சனங்கள் எழலாம்.
இதேபோல் மத்தியில் இரட்டை அதிகாரம் முறை சரியானதாக இல்லை என்று விமர்சித்திருந்தது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்தான். தற்போது அது தேவையில்லாத விவாதம் என்று கூறி உட்கட்சி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.