அன்னை இந்தியா... பாரத மாதா..... சோனியா, ராகுலை மறைமுகமாக வாரிய மோடி
அன்னை இந்தியா, பாரத மாதா என்று அவர் பேசியது சோனியாவை மனதில் கொண்டே என்று அவரது பேச்சைப் படிக்கும் யாருக்கும் தெரியும்.
நரேந்திர மோடியின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...
நமது நாட்டுக் கலாச்சாரம், பாரம்பரியத்தில் அனைவரையும் விட அன்னைக்கே முக்கியத்துவம் அதிகம். அம்மா என்று சொல்லும்போது அதில் புனிதம் இருக்கும். அதுதான் நமது பாரம்பரியம். நமது நாட்டைக் கூட தாய் நாடு என்றுதான் சொல்கிறோம். அன்னை இந்தியா என்றுதான் சொல்கிறோம். தாய் என்ற வார்த்தை அவ்வளவு புனிதமானது, உயர்ந்தது.
குஜராத் அரசும் கூட பெண்கள் முன்னேற்றத்திற்கு நிறைய செய்துள்ளது என்றார் மோடி.
சனிக்கிழமைதான் ராகுல் காந்தி, எப்ஐசிசிஐயின் போட்டி அமைப்பான சிஐஐயின் கூட்டத்தில் பேசினார். அப்போது நரேந்திர மோடியை அவர் கிண்டலடித்துப் பேசியிருந்தார். அவரது தேன்கூடு பேச்சைக் கண்டிக்கும் வகையில், சோனியா காந்தியின் தாய்நாட்டை மறைமுகமாக கிண்டலடித்து இன்று பேசியுள்ளார் மோடி.
மோடி மேலும் பேசுகையில், சில காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவை மிகவும் கேவலமாக கருதுகின்றனர். பேசுகின்றனர். இந்தியாவைத் தேன்கூடு என்றும் அதில் தேன் குடிக்க பலரும் ஆசைப்படுகின்றனர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ரத்தத்தை உறிஞ்சும் நபர்கள் அல்ல நாம். மாறாக நமது தாயாக இந்தியாவைப் போற்றுபவர்கள். இந்தியக் கலாச்சாரம் குறித்து அந்த இளம் தலைவருக்கு போதிய ஞானம் இல்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது.
இந்திய கலாச்சாரத்தின்படி, பெண்களுக்கான இடம் மிகவும் உயர்வானது. எங்கெல்லாம் தூய்மை உள்ளதோ, அங்கெல்லாம் நாம் தாய்மையை காண்கிறோம்.
கங்கை நதி தாயின் பிரதிபலிப்பு தான் இந்தியாவும் தாயின் மறுபதிப்பு தான். பசுவையும் தாய்க்கு ஒப்பாகவே நாம் கூறுகிறோம். எனவே, பெண்களின் நிலை எப்போதுமே மேன்மையாக போற்றப்பட்டு வந்துள்ளது. இதில் யாருக்கும் இருவேறு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மேற்கத்திய நாட்டினர், இந்திய பெண்களை வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டுமே பார்க்கின்றனர். இந்த கண்ணோட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. மலைப் பகுதிகளில் வாழும் பெண்களை பாருங்கள். பொருளாதார பங்களிப்பிற்கான அவர்களின் உழைப்பை கவனியுங்கள்.
பால் பண்ணை தொழிலைப் பொருத்த வரையில் ஆண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு எனலாம். பொருளாதார மேம்பாட்டில் பெண்களின் பங்கு குறைவு என்பது இன்றைய சர்ச்சை அல்ல. முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்ற நிலை தான் தற்போதைய கவலைக்குரிய பிரச்சினையாக உள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக உள்ள பெண்கள் பொருளாதார அதிகாரம் படைத்தவர்களாகவும் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் உயர்வடைந்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறும்.
எல்லா பெண்களிடமும் தொழில் முனைவோருக்கான ஆற்றலும், தகுதிகளும் உள்ளன. அவற்றை கண்டறிந்து பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையை அமைத்துத் தர வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
தற்போது, ஆண்களை விட பெண்கள் இரண்டுபடி உயர்வான நிலையில் உள்ளனர். பெண்களின் ஆற்றலுக்கு நாம் அங்கீகாரம் அளிக்க வேண்டும். காலங்கள் மாறிக்கொண்டு வருகிறது. பணிக்கு செல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்களை பணத்திற்காக மட்டும் மதிப்பது ஆண்களின் நோக்கமாக இருக்கக்கூடாது. பெண்களைப் பற்றிய ஆண்களின் மனநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.
குஜராத்தில் உள்ள பெரிய தொழில்களான அமுல் பால் பொருட்கள், லிஜ்ஜத் அப்பளம், ஜசுபென் பிட்சா உள்பட பல தொழில்களை பெண்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
பிட்சா ஹட்டின் வியாபாரத்தையும் பின்னுக்கு தள்ளி ஜசுபென் பிட்சா அகமதாபாத்தில் மிகவும் பிரபலமாக விற்பனை ஆகின்றன. ஜசுபென் இறந்த பிறகும் இந்த வியாபாரம் குறையவில்லை.
பெண் ஆளுநர் பெண்களுக்கு எதிரியாக இருக்கிறார்
21ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. பெண் சிசுக்கொலை ஒழியவில்லை. பெண்களுக்காக 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குஜராத் மாநில பெண் ஆளுநராக இருக்கும் கமலா பெனிவால் தடை செய்து வைத்துள்ளார்.
ஒரு பெண்மணி குஜராத்தின் ஆளுநராக இருந்தும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது நமது 'துரதிருஷ்டமே' என்றார் மோடி.