போலி என்கவுன்டர் வழக்கு- அமித் ஷாவை மீண்டும் கைது செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு
குஜராத் மாநில அமைச்சராக இருந்தபோது அமித் ஷா, சொராப்புத்தீன் போலி என்கவுண்டர் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். அண்மையில் ராஜ்நாத் சிங்கால் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் துல்சிராம் பிரஜாபதி என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் அவரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமித் ஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் செளகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொராப்புத்தீன் வழக்கிலேயே துல்சிராம் என்கவுண்டர் வழக்கும் ஒரு பகுதி என்பதால், அமித்ஷாவை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒரே வழக்குக்காக இரண்டு முறை அமித்ஷாவை கைது செய்யக் கூடாது என்றனர் நீதிபதிகள். மேலும் துல்சிராம் வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நீக்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு சொராப்புதீனும் 2006ஆம் ஆண்டு துல்சிராமும் என்கவுன்ட்டர் செயய்ப்பட்டனர். இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.