அக்னிக்கு முன்னமே அனல் பறக்குது தமிழ்நாட்டுல...பல ஊர்களில் சதம் போடும் வெயில்!
சென்னை: தமிழ்நாட்டில் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது வெயில் இப்பவே கண்ணைக் கட்டுது.
இவ்வருடம் அக்னிநட்சத்திரம் வருவதற்கு இன்னும் 3 வாரங்களுக்கு மேல் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது.
பல நகரங்களில் வெயில் இப்போதே சதம் அடித்து, மக்களின் உயிரை வதைக்க ஆரம்பித்து விட்டது.
திருச்சியில தீயா வெயிலடிக்குது குமாரு
திருச்சியில் கடந்த சனிக்கிழமை அதிகபட்ச வெயிலான 107 டிகிரியை எட்டியது. தொட்டதெல்லாம் சுடுது, அடிக்கற காற்றெல்லாம் அனலாக வீசுதுனு புலம்பறாங்க மக்கள்.
மதுர குலுங்க...குலுங்க.. வெயில்...
நேற்று மதுரை, ஈரோட்டில் வெயில் 107 டிகிரியை தொட்டது. மதுரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 106 டிகிரி அடித்த வெயில் நேற்று 107.42 டிகிரியை எட்டியது.
சென்னையில் வெயிலில் ஒரு நாள்...
சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று முதல் நாளாக வெயில் 100 டிகிரியை தொட்டது. மக்கள் வெளியில் செல்ல இயலாமல் தவிக்கின்றனர்.
இவர்களும் செஞ்சுரியன்கள்தான்...
ஈரோடு (107.6), மதுரை (107.42), திருச்சி, தஞ்சை, அரியலூர், கரூர் (104), வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், நெல்லை (103), தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் (102), சேலம், புதுக்கோட்டை (101), சென்னை மீனம்பாக்கம், நாமக்கல் (100) ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மேகம் குளிர்ந்தது...
ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும், சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. ஏற்காட்டில் நேற்று பகலில் திடீரென்று இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துச்சு...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் மாலையில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. காற்றில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன.
சின்னாளபட்டியில் கொட்டித் தீர்த்தது...
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பள்ளப்பட்டி, காமலாபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
வாழை போச்சே
மதுரை வாடிப்பட்டியில் பெய்த மழையில் வாழை மரங்கள் சேதமடைந்தன. சிவகாசியை அடுத்த தாயில்பட்டியில் இடி, மின்னல் தாக்கியது. இதில் ஒரு பட்டாசு ஆலையில் கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஒரு சில இடங்களில்... ரமணன் தரும் ஆறுதல்
வெப்பச் சலனம் காரணமாக திங்கள்கிழமை (ஏப்ரல் 8) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.