பொது இடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்... 'சிறுநீர்' அஜித்பவார் வருத்தம்!

மகாராஷ்டிராவில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இது பற்றி துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கட்சிக் கூட்டத்தில் பேசும்போது கிண்டல் செய்தார். ''அணைகளில் தண்ணீர் இல்லாதபோது எங்கிருந்து திறந்து விட முடியும்? நாங்கள் என்ன சிறுநீர் கழித்தா அணைகளை நிரப்ப முடியும்? குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில் சிறுநீர் கழிப்பதுகூட சாத்தியமற்றது'' என்றார்.
அஜித் பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும் பா.ஜ., சிவசேனா உறுப்பினர்கள் அஜித் பவாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கோஷம் எழுப்பியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது அஜித் பவார் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து பவார் கூறுகையில், "பொதுக்கூட்டத்தில் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை'' என்றார்.
அஜித்பவாரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக டூவிட்டர் இணையதளத்தில் மத்திய அமைச்சர் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications