விடுதலைப் புலிகளுக்கு ரூ50 லட்சம் கொடுத்த இந்திய அரசு: விக்கிலீக்ஸ்
டெல்லி: இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நட்ட ஈடாக ரூ50 லட்சம் கொடுக்கப்பட்டது என்று பதிவு செய்யப்பட்ட அமெரிக்க தூதரக ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
1988ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி நாளிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கான இந்திய தூதர் ஜே.என்.தீட்சித்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை அங்கு செல்வதால் புலிகள் வரி வசூலிப்பில் ஈடுபட்டிருந்தது பாதிக்கப்படும் என்பதால் நட்ட ஈடாக ரூ50 லட்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது இந்த நட்ட ஈடானது 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலைப் புலிகளிடம் ஒரே தவணையாக கொடுக்கப்பட்டது.
சென்னையில் இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ் காந்திக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது நிதி உதவிகள் தொடர்பாக ரகசிய பேரம் பேசப்பட்டது. அதன் ஒருபகுதிதான் இந்த ரூ50 லட்சம் என தெரிவித்தார். நாங்கள் காடுகளில் இருந்த போது இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பேதும் இல்லை. இவை அனைத்துமே 'ரா' அமைப்பினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட்ட பின்னர் ஏராளமான நிதி உதவி வழஙகவும் இந்தியா உறுதியளித்திருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.