சொத்தைப் பல்லை எடுக்கப் போய் பரிதாபமாக செத்துப் போன அமெரிக்க இளைஞர்
கலிபோர்னியா: கலிபோர்னியாவைச் சேர்ந்த 24 வயது இளைஞன் பல்லை பிடுங்கப் போன மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பலியாகியுள்ளார்.
கடந்த மாதம் சாண்டியாகோ நகரில், மாரிக் லாபின்ஸ்கி என்ற 24 வயது இளைஞர் பல் சொத்தை காரணமாக பல் ஒன்றை பிடுங்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு அதிக வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் மாரிக்கின் உடல் சீக்கிரமாக செயல் இழக்க ஆரம்பித்தது. இதனால் அவரை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால், 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மாரிக் உயிரிழந்தார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் மாரிக் உயிரிழந்துள்ளான் எனக் கூறி அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஸ்டீவன் பால் மீது நடவடிக்கை எடுக்கப் போராடி வருகின்றனர்.
மருத்துவ அறிக்கையில் அறுவைசிகிச்சையின் போது பாதியில் மாரிக் விழித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து இருமியதாகவும் அதனால் அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை துணியின் இரு பாகங்கள் மாரிக்கின் சுவாசக்குழாயினுள் சென்று விட்டதாகவும், அதை எடுக்கும் முயற்சியிலேயே அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் பால் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘ பொதுவாக அனைத்து நோயாளிகளுக்குமே அதிகப்படியான மயக்க மருந்து தருவது தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று தான். அதனால் எங்கள் மீது தவறு ஒன்றும் இல்லை' , எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது மாரிக்கின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பொறுமை காத்து வருகின்றனராம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.