ஆரூஷி, ஹேமராஜை கொலை செய்தது பெற்றோர்தான்: நீதிமன்றத்தில் சிபிஐ
4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி புறநகரில் ராஜேஸ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோரது மகளான ஆரூஷியும் அவர்கள் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜும் வீட்டுக்குள்ளேயே படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு பல்வேறு யூகங்களையெல்லாம் கொட்டிக் கொடுத்தது. பின்னர் இந்தக் கொலைக்கு ஆரூஷியின் பெற்றோர்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றும் இந்த வழக்கின் விசாரணையின் போது கடந்த 9-ந் தேதியன்று ஆரூஷியும் ஹேமராஜூம் கோல்ப் மட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்கான கத்தி மூலமே கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் இருவரும் ஆரூஷியின் பெற்றோரால்தான் கொலை செய்யப்பட்டனர் என்றும் குஜராத் தடவியல் கழக பல்கலைக் கழக அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இந்த வழக்கின் 39வது சாட்சியான சிபிஐ அதிகாரி கெளல் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, ஆரூஷியின் பெற்றோர் தான் இருவரது கொலைக்கும் காரணம் என்றும் வேறு வெளியார் எவரும் வந்து இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் சாட்சிகள் இருக்கிறதா? இருந்தால் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்களா? என்பதை நாளை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறது.