எரிவாயு குழாய்களை அகற்றாமல் முரண்டு பிடிப்பதா?: கெய்ல் நிறுவனத்திற்கு கருணாநிதி கண்டனம்
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை 710 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 'கியாஸ்' கொண்டு செல்லும் குழாய் அமைக்க, 'கெயில்' நிறுவனம் திட்டமிட்டது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, விவசாய நிலங்கள் வழியாக, இந்தக் குழாய் அமைக்கும் பணியை இந்த நிறுவனம் அண்மையில் துவக்கியது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் அடிப்படையில், அரசு தலைமைச் செயலாளரால் இதுபற்றி விவசாயிகளின் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த முதல்-அமைச்சர் ஆணையிட்டதன் பேரில், அந்தக் கூட்டங்களும் நடைபெற்று, அதிலே கலந்து கொண்ட விவசாயிகள் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவற்றின் அடிப்படையில் 25.3.2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் படித்த அறிக்கையில் 'கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும். நெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்களைப் பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்தினை தமிழக அரசின் சார்பில் நீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், விவசாய நிலங்களில் பதித்துள்ள எரிவாயுக் குழாய்களை இதுவரை அகற்றாமல், கெயில் நிறுவனம், முரண்டு பிடிப்பதாக அங்குள்ள விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை காரணமாக நான்கு மாதமாக விவசாயம் செய்ய முடியாமலும், மற்றப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச முடியாமலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண, இந்த விவசாயிகளின் குறை தீருவதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.