திமுக ஆட்சியில் 'ஓட்டை' பஸ்கள் 9,003; அதிமுக ஆட்சியில் 2,159 தான் பழுதானவையாம்!
சென்னை: கடந்த 2008-2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் 18,146 பஸ்கள் ஓடின. இதில் பழுதடைந்த பஸ்கள் 9,003 ஆகும். அதிமுக ஆட்சியில் இப்போது 20,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பழுதாகிய பஸ்கள் 2,159 தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டசபையில் இன்று தேமுதிக எம்எல்ஏ தினகரன் பேசுகையில், அரசு பஸ் டெப்போக்களில் நிறைய பஸ்கள் வெளியே நின்று கொண்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூரில் போக்குவரத்து பணிமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய செந்தில் பாலாஜி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கோவை சார்பாக சூலூரில் போக்குவரத்து பணிமனை அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்க கலெக்டரிடம் கேட்கப்பட்டது. இதில் 1.57 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமை மாற்றப்பட்ட பிறகு அங்கு பணிமனை தொடங்கப்படும்.
உறுப்பினர் கூறும்போது, அரசு பஸ் டெப்போக்களில் நிறைய பஸ்கள் வெளியே நிற்பதாகக் கூறினார். கடந்த ஆட்சியில்தான் இடவசதியின்றி பஸ்கள் வெளியே நிறுத்தப்பட்டன. புரட்சித் தலைவி ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 43 மணிமனைகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இடமின்றி டெப்போவுக்கு வெளியே பஸ்கள் நிறுத்தாத அளவுக்கு புதிய பணிமனைகளை துவக்கி வைத்ததன் மூலம் பழுதடைந்து நடுவில் நிற்கும் பஸ்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
கடந்த 2008-2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் 18,146 பஸ்கள் ஓடின. இதில் பழுதடைந்த பஸ்கள் 9,003 ஆகும். அதிமுக ஆட்சியில் 2011-12ல் 19,507 பஸ்கள் இயக்கப்பட்டதில் பழுதடைந்த பஸ்கள் எண்ணிக்கை 2,882.
2012-13ல் இப்போது 20,500 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதில் பழுதாகிய பஸ்கள் 2,159 தான்.
தேவைக்கு ஏற்ப பணிமனை அமைக்கப்படுவதால் பஸ்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு நடுவழியில் நிற்காமல் இயங்குகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications