செங்கல்பட்டில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி வெட்டிக் கொலை: 6 பேருக்கு வலை
காஞ்சீபுரம்: செங்கல்பட்டு அருகே ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பெரியநத்தம், தட்டான்மலைத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகன் சுதாகர்(28). ரவுடி. அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சனிக்கிழமை இரவு சுதாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு செங்கல்பட்டு புறவழிச்சாலை பழவேலி அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மொபட்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்த சுதாகரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுதாகர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.