லடாக் எல்லையில் இந்திய- சீன படைகள் திடீர் வாபஸ்!
இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள தெளலக் பெக் பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி சீன ராணுவத்தினர் 50 பேர் சுமார் 19 கி.மீ தூரத்துக்கு ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். சீனா தனது ஊடுருவலை கைவிட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால் சீனா இதை நிராகரித்து தமது எல்லை பகுதியில்தான் ராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே 3 முறை கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று பிரிகேடியர் அதிகாரிகள் நிலையிலான கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனா தனது ராணுவத்தை திரும்பப் பெறப் போவதில்லை என மீண்டும் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்திய-சீன படைகள் ஒரே நேரத்தில் திரும்பப் பெறப்பட்டன. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இந்திய-சீன படைகள் வாபஸ் பெறப்பட்டதால் கடந்த 3 வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்தது.