நாகர்கோவில்: ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை கொன்ற யானை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஒருவர் யானை தாக்கி மரணமடைந்தார்.
குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று ரப்பர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபடுவார்கள்.
கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி பேபி (55). இவரும் சில தொழிலாளர்களும் இன்று காலை காளிகேசம் பகுதிக்கு வேலைக்கு சென்றனர். பேபி ஒரு தோட்டத்திலும், மற்ற தொழிலாளர்கள் வெவ்வேறு தோட்டங்களிலும் நின்று ரப்பர் பால் வெட்டி கொண்டு இருந்தனர்.
பேபி வேலை செய்து கொண்டு இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் திடீரென யானை ஒன்று புகுந்தது. யானையை பார்த்த பேபி அலறல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்தனர். அதற்குள் யானை பேபியை தந்தத்தால் குத்தி கொன்றது. இதில் பேபி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பேபி பலியானது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கீரிபாறை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ், மற்றும் போலீசார் அங்கு வந்து பேபியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து ரப்பர் தோட்ட தொழிலாளி பேபி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில்,
கீரிப்பாறை, காளிகேசம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மலையின் மேல் உச்சியில் இருந்து கீழே இறங்கி வரும். நேற்று பலத்த மழை பெய்ததையடுத்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. தண்ணீர் குடிப்பதற்காக யானை வந்தபோது பேபி யானையிடம் சிக்கி உள்ளார். இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.