டெல்லியில் மாநாடு.. தமிழகத்தில் போர் விமானங்கள்! இலங்கையில் பாக்.போர்க் கப்பல்!
டெல்லி/சென்னை: இந்திய கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இந்தியாவை சுற்றியும் கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்து மா சமுத்திரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக் கடல், வங்கக் கடல் தாண்டி இவற்றை இணைத்தோடும் இந்தியப் பெருங்கடல்தான் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முதன்மை பங்கு வகிக்கக் கூடியது. இந்திய பெருங்கடலில் யார் கை ஓங்கி இருப்பது என்பதில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அமெரிக்காவும் இப்போது இந்த போட்டியில் களம் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில் 22 முறை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய பெருங்கல் பரப்பில் எட்டிப் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கெனவே கடற்படைத் தளங்கள் அமைத்து நெருக்கடி கொடுத்து வரும் சீனாவின் கடற்பரப்பு அத்துமீறலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில்தான் ஒரே வார காலத்தில் இந்தியப் பெருங்கடலை மையமாக வைத்து நடைபெற்று வரும் நிகழ்வுகளின் தொகுப்புகளளப் பார்க்கலாம்...
இந்திய கடற்படை தளபதிகள் மாநாடு
சீனாவின் நீர்மூழ்கிகள், வெளிநாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அண்மையில் 2 நாள் இந்திய கடற்படை தளபதிகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் சீனாவின் நடமாட்டம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக அமெரிக்கா மூலம் சீனாவின் நீர்மூழ்கிகள் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் அறிக்கை ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் இந்தியாவைச் சுற்றிய சீனாவின் நெருக்குதல் எப்படி இருக்கிறது என்பது விவரிக்கப்பட்டிருந்ததாம். இது தொடர்பாகவும் கடற்படை தளபதிகள் ஆராய்ந்துள்ளனர்.
அரக்கோணத்தில் நவீன போர் விமானம்
இதனிடையே அமெரிக்காவில் இருந்து அதிநவீன பி 8 ஐ என்ற போர் விமானம் நேற்று அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய விமான படைக்கு பி8ஐ போர் விமானம் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் முதல் விமானம் நேற்று ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தது. அமெரிக்கா சியடெல் நகரத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இந்த விமானம் அரக்கோணம் வந்தடைந்தது. இதில் அதிநவீன ரேடார்கள் நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து தாக்கும் திறன் ஆயுதங்கள், ஏவுகனைகள் குண்டுகள், உயிர்காக்கும், கருவிகள் உள்ளன. தொடர்ந்து 10 மணி நேரம் விண்ணில் பறக்கும் திறன் கொண்டது. 2 பைலட் உள்பட 12 பேர் இதில் பயணம் செய்யலாம். இந்திய பெருங்கடல் பகுதியில் 200 மைல் தூரத்துக்கு கண்காணிக்க முடியும்.
தஞ்சாவூரில் சுகோய் போர் விமானம்
தஞ்சாவூரில் புதிய விமான தளத்தை வரும் 27-ந் தேதி பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி திறந்து வைக்க உள்ளார். இந்த விமான தளத்தில் சுமார் 16 முதல் 18 வரையிலான சுகோய் போர் விமானங்கள் நிறுத்தப்பட இருக்கின்றன.இந்தியாவின் தென்பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் நடமாட்டத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட வங்காள விரிகுடாவை இதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
திருகோணமலையில் பாகிஸ்தான் போர்க் கப்பல்
இந்தியாவில் இப்படி பரபரப்பு எனில் சீனா நன்கு நிலை கொண்டிருக்கும் இலங்கையில் பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்று 4 நாள் பயணமாக முகாமிட்டிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த பிஎன்எஸ் சயீப் என்ற இந்தப் போர்க்கப்ப நாளை வரை அங்கு நிற்கும். இந்த போர்க் கப்பலானது சீனாவில் கட்டப்பட்டது. 123 மீட்டர் நீளமான இந்தப் போர்க்கப்பல், அதிநவீன ஆயுதங்களைக் கொண்டது. நீர்மூழ்கி எதிர்ப்பு Z9EC ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகளும் இந்தக் கப்பலில் உள்ளன. திருகோணமலை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பாகிஸ்தான் கடற்படையினர் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.