இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே

இலங்கை இறுதிப் போரின் 'வெற்றி' கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது:
தாய் நாட்டை மீட்டெடுத்ததற்காக வெற்றிவிழாவை 4வது ஆண்டாகவும் கொண்டாடுவதற்காக பெருமையடைகின்றேன். இலங்கை வரலாற்றில் தாய்நாடு ஒன்றிணைக்கப்பட்ட முக்கிய சந்தர்ப்பம். நாட்டில் மரணபயம் நீக்கப்பட்டு சுதந்திரமாக பயணிக்கக் கூடிய காலம் உருவாகியிருக்கிறது. மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட 3 இலட்சம் மக்களை மீட்டெடுத்திருக்கிறோம். தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள், கண்,காது, உடல் உறுப்புகளை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு பூஜை செய்தனர். .ஆனால் சிலர் நாட்டின் படையினரை சர்வதேச தூக்கு மேடைக்கு கொண்டுச்செல்வதற்கு முயற்சித்தனர்.
ஒரு காலத்தில் காலி முகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்தியவங்கி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகே இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் குண்டு லாரி அனுப்பப்பட்டது. அனுராதபுரம் மகாபோதி விஹாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1990களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையவில்லை.
நாட்டில் பல இடங்கள் மற்றும் தெருகள் புலிகளினால் தாக்குல்கள் நடத்தப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டன. அந்த வீதி வழியாக சென்ற இன்றேல் ஜனாதிபதி பிரேமதஸா கொல்லப்பட்டார். இதே வீதியில்தான் பாரமி குலத்துங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைகொடுக்குமாறு சர்வதேசம் எங்களிடம் அடிக்கடி கேட்டது. எனினும் நாம் இளைஞர்களின் சக்தி மற்றும் வீரத்தில் நம்பிக்கைக்கொண்டோம்;. பயத்தை இல்லாது செய்து நம்பிக்கையூட்டினோம்.
ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் சிலர் முயற்சித்தனர். சில வெளிசக்திகள் இந்த நாட்டை ஆள விரும்புகின்றன. அப்படியானவர்கள்தான் இலங்கையில் குளங்களை கட்டிய மன்னனான மஹாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர். யுத்தம் செய்த யுகமாக அல்ல, டயர்கள் போட்டப்பட யுகமாக அல்ல, யுத்தம் நிறைவடைந்த, இரத்த கங்கை நிறுத்தப்பட்ட யுகம் மற்றும் நாட்டை முன்னோக்கிய யுகமாக மாற்றவேண்டும்.
வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம் பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தபோது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவுக்கொடுத்தது. தூக்குமேடை வரை செல்லவேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக்கொடுத்தோம். பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இப்படியான நடைமுறை இல்லை.
ராணுவத்தில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். அதனால் தான் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது கிளிநொச்சியில் அந்த தீர்மானத்துக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கறிவேன். ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தனர். அவர்கள் இலங்கையை பிரிக்க விரும்பாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றனர் என்றார் அவர்.
முன்னதாக குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைசூழ மகிந்த ராஜபக்சே தமது மனைவியுடன் மேடைக்கு வ்ந்தார். அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீதமிசைக்க ராஜபக்சே தேசியக்கொடியை ஏற்றினார். முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்ட ராஜபக்சே படைகளின் அணிவகுப்பை சிறப்பு வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications