தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர்: அதிர்ச்சித் தகவல்
தூத்துக்குடி: தமிழகத்தில் 6 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர் என்பது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவர் ஷாருஷியா அஞ்சும் தெரிவித்துள்ளார்.
காச நோய் கண்டறிதலை அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு சாரா மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசிஷ் குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் காச நோய் பிரிவு ஆலோசகரான மருத்துவர் ஷாருஷியா அஞ்சும் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு காசநோயாளிகளை கண்டறிந்து அரசுக்கு உடனடியாக தெரிவிப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு ஷாருஷியா அஞ்சும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 6 லட்சம் காச நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 40,000 பேர் காசநோயால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
காச நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறையானது அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் மருத்துவர்கள் காசநோயாளிகளை கண்டறிந்து உடனடியாக மாவட்ட காசநோய் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக இமெயில் ஐடியுடன் மிஸ்டு கால் கொடுத்தால் தகவல்களை பெறும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்ப காச நோயாளிகள் தொடர்பான தகவல்களை மருத்துவர்கள், மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காச நோயை கண்டறிவது தொடர்பான பணிக்கு முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. கிடைக்கும் தகவல்களை பொறுத்து ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் எவ்வளவு காசநோயாளிகள் உள்ளனர் என்பது தெரிய வரும் என்றார்.
இந்த கூட்டம் நடைபெற்ற நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி முழுவதுமாக ஏற்றப்படாது முக்கால்வாசி அளவிலான கம்பத்தில் பறந்தது கூட்டத்திற்கு வந்திருந்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications