சாதித் தீ பற்றி எரிய காரணமான தர்மபுரி காதல் தீ.. கோர்ட் வாசலில் அணைந்து போனது-பிரிந்தது ஜோடி!
தர்மபுரி: தர்மபுரியில் மிகப் பெரிய அளவில் சாதிக் கலவரம் ஏற்படக் காரணமான ஒரு காதல் இன்று கோர்ட்டில் வைத்து முறிந்து போனது.. ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து போய் விட்டார்கள் காதலர்கள்.
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது தர்மபுரி கலவரம். மூன்று கிராமகளை ஒரு ஜாதியினர் சேர்ந்து ஒட்டுமொத்தமாக தீவைத்துக் கொளுத்திப் போட்ட கலவரத்தை மறக்க முடியுமா... அதன் தொடர்ச்சியாக வடமாவட்டங்களில் ஆங்காங்கே தீக்குச்சிகளைக் கிழித்துப் போட்டு சாதி வெறியாட்டத்தை பலரும் விளையாடிப் பார்த்த அவலத்தை மறக்க முடியுமா....
ஆனால் இன்று அந்தக் கலவரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட ஒரு புரட்சித் திருமணம் .. முடிந்து போய் முறிந்து போய் விட்டது.

இளவரசன் - திவ்யா
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இருவரும் காதல் கொண்டனர். இருவரும் வேறு வேறு சாதியினர்.

குறுக்கே வந்த சாதி.. தப்பி ஓடிய காதல்
இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் இளவரசனும், திவ்யாவும் ஆகஸ்ட் 8ம் தேதி வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடத்தலா.. காதலா...
இதையடுத்து இரு தரப்பிலும் போலீஸில் புகார்கள் குவிந்தன. பெண்ணைக் கடத்தி விட்டதாக ஒரு புகாரும், காதலால் ஓடினர் என்று இன்னொரு புகாரும் பதிவானது.

தூக்கில் தொங்கிய தந்தை
இதையடுத்து இருவரையும் தேடிப் பிடித்த போலீஸார் இருவரும் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழ வழி வி்ட்டு ஒதுங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

3 கிராமங்களைக் கொளுத்திய சாதி வெறி
அதைத் தொடர்ந்து சாதிக் கலவரம் மூண்டது. நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனி உள்பட 3 கிராமங்கள் தீக்கிரையாகின. அங்கிருந்து வட மாவட்டங்கள் பலவற்றுக்கும் பரவின.

10 மாத பந்தம் பட்டென்று முடிந்தது
ஆனால் பத்து மாதமே ஆன நிலையில் இந்த காதல் தீ இப்போது சட்டென்று அணைந்து விட்டது. உறவினரை மருத்துவனையில் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி தனது வீடு சென்ற திவ்யா மீண்டும் இளவரசன் வீடு திரும்பவில்லை.

போலீஸுக்குப் போன இளவரசன்
இதையடுத்து போலீஸில் புகார் செய்தார் இளவரசன். போலீஸார் விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவின் தாயார் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணைக்கு வந்தது.

ஹைகோர்ட்டில் திவ்யா
போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் திவ்யா. இளவரசனும் வந்தார். கோர்ட்டில் பெரும் கூட்டம். நீதிபதிகள் திவ்யாவை அழைத்தனர். அப்போது நீதிபதிகளிடம் சென்ற திவ்யா கதறி அழுதார். நீதிபதிகள் அவரை அமைதிப்படுத்தினர்.

தனியாக இருக்கிறாரே அம்மா...
அப்போது நீதிபதிகளிடம், அப்பா இறந்து விட்டார். அம்மா தனியாக இருக்கிறார் என்று கூறி அழுதார் திவ்யா. அதைக் கேட்ட நீதிபதிகள், இளவரசன் வந்திருக்கிறார், பேசுகிறாயா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த திவ்யா, இல்லை என்று கூறி விட்டார்.

மனக் குழப்பத்தில் இருக்கிறேன்
பின்னர் யாருடன் போகிறாய் என்று நீதிபதிகள் கேட்டபோது, மனக்குழப்பத்தில் இருக்கிறேன், அம்மாவுடன் போக விரும்புகிறேன் என்றார் திவ்யா. அதைப் பார்த்த இளவரசன், தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவரைப் பார்க்கக் கூட இல்லை திவ்யா.

கடத்தவில்லை
இதையடுத்து இளவரசன் தரப்பில் திவ்யாவைக் கடத்திச் சென்று மிரட்டியுள்ளனர் என்று கூறினர். ஆனால் நீதிபதிகளோ, அப்படியெல்லாம் இல்லை, யாரும் கடத்தவில்லை. நாங்கள் பேசி விட்டோம். தானாகவே போனதாக கூறியுள்ளார். மனக்குழப்பத்தில் இருப்பதால் தாய் வீடு செல்ல விரும்புவதாக கூறுகிறார் என்றனர்.

தாயுடன் செல்லலலாம்
மேலும் திவ்யா தனது விருப்பப்படி தாயுடன் செல்லலாம். வழக்கு ஜூலை முதல் வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் திவ்யாவின் தாயார் கோரிக்கைப்படி அவரது குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தனித் தனிப் பாதையில்..
அதன் பின்னர் திவ்யா தனது தாயாருடன் போனார். அவர் போவதைப் பார்த்து ஏக்கத்துடன் இளவரசன் தனது தரப்பினருடன் மெளனமாக கிளம்பிச் சென்றார்..












Click it and Unblock the Notifications