ஓங்கி அடித்த கணவனுக்கு 30 சவுக்கடி, 10 நாள் சிறை, 1 வார கவுன்சிலிங்...: சவுதியில் ’மனைவிக்கு மரியாதை
ரியாத்: சவுதி அரேபியாவில் மனைவியின் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக, கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை வாசமும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் கார் ஓட்டக்கூடாது, பொது இடங்களுக்கு செல்லும் போது ஆண்கள் துணையுடன்தான் போக வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள சவூதி அரேபியாவில் இத்தகைய தீர்ப்பு ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயமே.
சவுதி அரேபியாவின் கதிப் மாவட்டத்தில் உள்ள சஃப்வா நகரில் வசிக்கும் பெண்ணொருவர், கணவர் தன்னை கன்னத்தில் அறைந்து விட்டதாக போலீசில் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது..
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனது குற்றத்தை அவரது கணவர் ஒப்புக்கொண்டபோதிலும், 'எனது பெற்றோரிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதால் அவளை கன்னத்தில் அறைந்தேன்' என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் கணவர் தன் மனைவியை கன்னத்தில் அடித்தது தவறு என்பதை வலியுறுத்திய நீதிபதி, அவருக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், மனைவி விரும்பினால், தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தை பார்வை இடலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார் நீதிபதி.
மனைவியை எப்படி நடத்துவது என்ற 'கவுன்சிலிங்' வகுப்பில், தண்டனைக்குப் பிறகு கணவர் பங்கேற்க வேண்டும் என நீதிபதி அறிவுறித்தி உள்ளார்.