மதுரை: அடகுக் கடை உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.60 லட்சம் நகை கொள்ளை
மதுரை: மதுரையில் நகை அடகுக்கடை உரிமையாளரின் கையை கட்டிப் போட்டு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை பசுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் அடகுக்கடை வைத்துள்ளார். கடையில் பசுமலைப் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவர் மேனேஜராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று பகல் 11 மணியளவில் கடைக்கு வந்த இரண்டு பேர் தங்கத் தோடு அடகு வைக்க வேண்டும் எனக் கூறி யுள்ளனர். தெரிந்தவர்கள் மூலம் வந்தால்தான் நகையை அடகு வாங்க முடியும் என துரைப்பாண்டியன் கூறியுள்ளார்.
உடனே வந்தவர்களில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கொண்டுவந்த தங்கத் தோடை சரிபார்க்க துரைப்பாண்டி முயன்றுள்ளார். உடனே அடகு வைக்க வந்த நபர் துரைப்பாண்டியின் கைகளை முதுகுப்பக்கமாகத் திருப்பி பிடித்துக் கொண்டதாகவும், வெளியே சென்றவர் திரும்பி வந்து, அங்கிருந்த துணியால் கைகளைக் கட்டியதுடன், வாயில் துணியைத் திணித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, லாக்கரில் இருந்த நகைகளை சாக்கில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் கடைக்கு வந்த நபர் ஒருவர் துரைப்பாண்டியனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டுள்ளார். அதன்பிறகே கொள்ளைச் சம்பவம் தெரியவந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் வந்து கைரேகைகளைச் சேகரித்தனர்.
கடை மேலாளர் துரைப்பாண்டியனிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பதற்றமின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.60 லட்சம் எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மர்ம நபர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் தாக்கியதில் துரைப்பாண்டியனுக்கு வலது கை, இடது கை மேற்பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. துரைப்பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.