ஒத்த மழைக்கே இப்படின்னா.. ஓயாம மழை பெய்யும் சிரபுஞ்சி எப்படி இருக்கும்?
டேராடூன்/ஷில்லாங்: உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒருநாள் அடித்து துவைத்த பெருமழை வெள்ளமாக வெடித்து ஆயிரக்கணக்கான உயிர்களை காவெடுத்திருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களை நடுமலைகளில் நடுநடுங்க வைத்து மரணத்தை முன்நிறுத்திக் காட்டியிருக்கிறது. ஆனால் எப்போதும் மழை பெய்யக் கூடிய சிரபுஞ்சியோ இப்போது கவலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது..
பனிபோர்த்தி ரம்மியமாக காட்சியளித்த இமயமலை சிகரங்கள் இப்போது படுபயங்கரமான பேரழிவுச் சின்னங்களாக உருமாறி நிற்கின்றன. இந்துக்கள் இத்தனை ஆயிரமாண்டுகாலம் மேற்கொண்ட இமயமலை புனித யாத்திரை இனி எப்போது என்ற கேள்விக்குறி எழுந்து நிற்கிறது. சரி ஒருநாள் மழையோ ஒருவார மழையோ வடக்கே இமயமலையையே புரட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உலகிலேயே அதிக அளவு மழை பெய்யக் கூடிய இடங்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
சிரபுஞ்சியும் மெளசின்ரமும்
உலகிலேயே அதிகளவு மழை பெய்யக் கூடிய இடம் என்ற பெருமை நாட்டின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு இருந்தது. தற்போது இதன் அருகே உள்ள மெளசின்ரம்தான் இந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறது.
எப்படி ஆண்டு முழுவதும் மழை கிடைக்கிறது?
இது வங்கதேசத்தின் எல்லையை ஒட்டி இருக்கிறது. சிரப்ஞ்சி, மெளசின்ராம் ஆகிய மலைத் தொடர்கள் முடிவடைந்த உடன் வங்கதேசத்தின் சமவெளிப் பிரதேசம் தொடங்கி விடுகிறது. இதனால் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவக் காற்று நேரடியாக மெளசின்ராம், சிரபுஞ்சி மலைமுகடுகளை முட்டிக் கொண்டே இருப்பதால் மழை எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கிறது.
சிரபுஞ்சியில் மே மாத மழை எப்படி?
1984ம் ஆண்டு சிரபுஞ்சியில் மே மாதம் பெய்த மழை அளவு 3961.2 மி.மீ. இதுதான் மே மாதத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு. நடப்பு ஆண்டு மே மாதத்தில் 1422.9 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம்..
சீர்குலையாத சிரபுஞ்சி
இமயமலையைப் போல நீர்மின் திட்டங்களுக்காகவும் அணை கட்டுமானத்துக்காகவும் ஆறுகளின் போக்கை திசை திருப்பாமல் இன்னமும் ஆதிகாலத்தைப் போல அப்படியே ஓடவிட்டிருக்கின்றனர் மேகலாயாவாசிகள். உலகிலேயே 3வது மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நொகாலிகாய் இன்னமும் அதே பெருமையோடு அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது.
சிரபுஞ்சி வாழ் மக்கள்
இமயமலையைவிட நெடிதுயர்ந்த மலைகள்.. இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் எப்போதும் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறுகள்.. எப்போதும் கொட்டும் மழைக்கும் நடுவே எப்போதும்போல இயல்பு வாழ்க்கை வாழுகிற மக்கள்.. ஆறுகளைக் கடக்க மரங்களின் வேர்களையே பாலங்களாக பயன்படுத்துகிற மக்கள். காட்டாற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மேடான பகுதிகளில் மரவீடுகள் என பாதுகாப்பான ஒரு வாழ்க்கை வாழ்கின்றனர்...
ஆனால்....
ஆனால் சிரபுஞ்சியில் இப்போதும் மலைமுகடுகளை மேகங்கள் வந்து தழுவிச் செல்கின்றன. வழக்கம் போல மழை வந்துவிடும் என்றும் நம்புகின்றனர்..ஆனால் அண்மைக்காலமாக மழைதான் வந்தபாடில்லை..கண்ணாமூச்சு காட்டுகிறது என்று கவலை தோய்ந்த குரலில் சொல்கிறவர் யார் தெரியுமா? சிரபுஞ்சியின் பெருமையை உலகுக்கு இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சிரபுஞ்சியில் 15 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிற நமது தமிழரான மதுரையைச் சேர்ந்த டேனியல் ராயன்! இவர்தான் இன்று சிரபுஞ்சியின் சர்வதேச தூதராக செயல்பட்டு வருகிறார்..(இவரைப் பற்றி தனிப்பதிவு பின்னர்)